காஞ்சிபுரம் மாவட்டத்தில் எஸ்.பி. தலைமையில் 34 இடங்களில் வாகனச்சோதனை
காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 34இடங்களில் காவல்துறையினர் திடீர் வாகனச்சோதனையில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில், இரு கட்டங்களாக நடைபெற உள்ளது இதில் ஸ்ரீபெரும்புதூர், ஓரகடம் உள்ளிட்ட, அதிக வருவாய் உள்ள பகுதி கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் நபர்களுக்குள், கடும் போட்டி உள்ளது.
இதை கவனத்தில் எடுத்த காவல்துறை, கடந்த பத்து தினங்களாக 100க்கும் மேற்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கைது செய்தது. அதனை தொடர்ந்து வெளியில் சுற்றிவரும் பல இளம் குற்றவாளிகளை, குடும்பத்தினருடன் அழைக்கப்பட்டு வருவாய் கோட்டாட்சியர் முன்பு, ஓராண்டு நன்னடத்தையாக இருப்பேன் என விதி எண் 110 கீழ் கையெழுத்திட்டனர். ரவுடிகளின் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டு, ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில், நேற்று மாலையில் இருந்து, காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர் தலைமையில் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் 34 இடங்களில் "DISARMS OPERATION" எனும் பெயரில், திடீர் வாகன சோதனை நடத்தினர். இதில் போக்குவரத்து விதிகளை மீறிய 770 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அறிவுறுத்தப்பட்டனர்.
ஊரக உள்ளாட்சி தேர்தல் நிறைவு பெறும் வரை, இதுபோன்ற திடீர் வாகனச்சோதனையில் மாவட்ட முழுவதும் ஈடுபட்டு ரவுடிகளை கைது செய்யப்படுவர்; பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை, காவல்துறையினர் உறுதி செய்வர் என்று, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தெரிவித்தார்.