/* */

குடிநீர் இணைப்பிற்கான பங்களிப்பு தொகை செலுத்த சனிக்கிழமை சிறப்பு முகாம்

ஜல் ஜீவன் திட்டத்தில் 2020-21 நிதி ஆண்டில் மாவட்டத்தில் 1, 16, 783 வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

குடிநீர் இணைப்பிற்கான பங்களிப்பு தொகை செலுத்த சனிக்கிழமை சிறப்பு முகாம்
X

 ஜல் ஜீவன் திட்டத்தில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ( கோப்பு படம்) .

ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ஊரக பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 55 லிட்டர் வீதம் தரமான சுத்தமான குடிநீர் வழங்கி, குடிநீர் பெறுவதில் 2024 ஆம் ஆண்டிற்குள் தன்னிறைவு பெற்றதாக அறிவிப்பதே இத் திட்டத்தின் நோக்கமாகும்.

இத்திட்டத்தின் கீழ், 2021-க்குள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 5 ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 272 கிராம ஊராட்சிகளில் 1350 குக்கிராமங்களில் அனைத்து வீடுகளுக்கும் தரமான சுத்தமான குடிநீர் வழங்குவது மற்றும் ஊராட்சி பகுதிகளில் உள்ள பள்ளிகள், அங்கன்வாடிகள், பொது நிறுவனங்களுக்கும் தரமான குடிநீர் வழங்குவதே நம்மாவட்டத்தின் சிறப்பம்சமாகும்.

இத்திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படும் திட்டமாகும். மத்திய அரசின் 45% பங்களிப்பு, மாநில அரசின் 45% பங்களிப்பு மற்றும் பொது மக்களின் 10% பங்களிப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2020-21 நிதி ஆண்டில் 1, 16, 783 வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இத்திட்டத்தின் கீழ் 223 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள், 458 ஆழ்துளை கிணறுகள், 49 திறந்தவெளி கிணறுகள் 104 பம்ப் ரூம்கள், 897.76 கி.மீ குடிநீர் பைப்லைன் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது.

இதில் பொது மக்களின் 10% பங்களிப்பு தொகை ஒரு குடிநீர் குழாய் இணைப்பிற்கு பொது பிரிவினர் ரூ.1500/-, ஆதிதிராவிடர்/ பழங்குடியினர் பிரிவினர் ரூ.750/ .

பெரும்பாலான கிராம ஊராட்சிகளில் முழுமையாக வசூல் செய்யப்படாமல் நிலுவையில் உள்ளது. இந்த நிலுவைத் தொகையினை வசூல் செய்ய 02.07.2022 சனிக்கிழமை அன்று சிறப்பு முகாம் நடத்திட மாவட்ட நிர்வாகத்தால் திட்டமிடப்பட்டுள்ளது.

மேற்காணும் சிறப்பு முகாமில், ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அனைத்து ஊராட்சி ஒன்றிய களப்பணியாளர்கள் ஆகியோர் பங்கேற்று முகாமினை சிறப்பாக நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்திலடங்கிய அனைத்து கிராம ஊராட்சிகளிலும் உள்ள மக்கள் பிரதிநிதிகள் பங்கெடுத்து பொது மக்களை ஊக்கப்படுத்தி பங்களிப்பு தொகையை செலுத்த முன்வருமாறு நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Updated On: 30 Jun 2022 3:45 PM GMT

Related News