காஞ்சி: சிறப்பு அலங்காரத்தில் நடவாவி கிணற்றில் சீதையுடன் ராமர் ஊர்வலம்
சித்ரா பௌர்ணமி நடவாவி உற்சவத்தை முன்னிட்டு, காஞ்சிபுரம் ஐயங்கார் குளம் சஞ்சீவிராயர் திருக்கோவிலில் இருந்து ராமர்,சீதை, லட்சுமணனர் எழுந்தருளினர்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் அடுத்த ஐயங்கார் குளம் பகுதியில் சஞ்சீவிராயர் கோவில் எனும் அனுமன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சித்ரா பௌர்ணமி நடவாவி உற்சவத்தை முன்னிட்டு பௌர்ணமி தினமான நேற்று முன் தினம், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் சுவாமி ஐயங்கார் குளம் சஞ்சீவிராயர் திருக்கோவிலுக்கு எழுந்தருளினார்.
சஞ்சீவிராயர் கோவிலுக்கு எழுந்தருளிய வரதராஜப் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டதை தொடர்ந்து. அருகில் உள்ள நடவாவி கிணற்றில் எழுந்துருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து நடவாவி உற்சவம் கண்டருளி சென்றார். தொடர்ந்து, நேற்று சஞ்சீவிராயர் திருக்கோயிலில் உள்ள ராமர், சீதை, லட்சுமணனுக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தி, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
பின்னர், மேளதாளங்கள் முழங்க கிராமமக்கள் புடைசூழ நடவாவி கிணற்றிற்கு எழுந்தருளி 16 கால் மண்டபத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அடுத்து, புஞ்சை அரசந்தாங்கல் ,ஐயங்கார் குளம், கிராமப்பகுதியில் உள்ள வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வழிநெடுகிலும் திரளானன பக்தர்கள் கூடி நின்று தீபாராதனை காட்டி சாமியை வணங்கி வழிபாடு நடத்தினார்கள்.