20 டன் ரேஷன் அரிசி , 4 லாரி பறிமுதல் - வருவாய் அலுவலர் குழு அதிரடி
காஞ்சிபுரத்தில் இருந்து கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 20டன் ரேஷன் அரிசி, 4 லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் அடுத்த ஒலிமுகமதுபேட்டை அருகே உள்ள காவாங்கரை தெரு பகுதியில், காலிமனை ஒன்றில் இருந்து லாரியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக, மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர் செல்வத்திற்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், கோட்டாட்சியர் ராஜலட்சுமி ஆகியோர் சென்று பார்த்த போது, தமிழ்நாடு பதிவெண் கொண்ட சரக்கு வேன் ஒன்றில் இருந்து கர்நாடக பதிவெண் கொண்ட மற்றொரு லாரிக்கு, சிலர் ரேஷன் அரிசியை சாக்கு பைகளில் கட்டி ஏற்றுவது தெரிய வந்தது.
உடனடியாக அதிகாரிகள் வாகனங்களில் இருந்தவர்களை சுற்றிவளைத்த நிலையில், சுதாரித்துக் கொண்ட கடத்தல்காரர்கள் தப்பி சென்றனர். லாரியில் 300 மூட்டைகளில் 20 டன் ரேஷன் அரிசி இருந்தது. காஞ்சிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்பதற்காக கர்நாடகாவுக்கு கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, 20 டன் ரேஷன் அரிசி மற்றும் தமிழ்நாடு பதிவெண் கொண்ட இரண்டு மினி லாரி, தமிழ்நாடு, கர்நாடக பதிவெண்கள் உடைய தலா ஒரு லாரி என நான்கு வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ரேஷன் அரிசியை கடத்தி வந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.