பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக திட்டமிட்டபடி நாளை பேரணி
பரந்தூர் பசுமை விமான நிலையத்திற்கு எதிராக கிராம மீட்பு குழுவினர் நாளை திட்டமிட்ட படி பேரணி நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
HIGHLIGHTS
அன்னூருக்கு ஒரு நியாயம்.. பரந்தூருக்கு ஒரு நியாயமா ? .. நாளை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி திட்டமிட்டபடி நடைபெறும் என பரந்தூர் விமான நிலைய மீட்பு ஒருங்கிணைப்புக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகள் வருகை மற்றும் சரக்குகள் கையாளும் நிலை அதிகரித்து வருவதை கணக்கில் கொண்டு இரண்டாவது பசுமை விமான நிலையம் உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டு மாநில அரசு ஒத்துழைப்புடன் செயல்படுத்த திட்டமிட்டது.
இதற்காக மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது .இறுதியாக காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் பகுதி தேர்வு செய்யப்பட்டு அதையொட்டி அங்குள்ள 13 கிராமங்களின் நிலத்தை கையகப்படுத்த திட்டமிடப்பட்டது.
இந்த அறிவிப்பு அப்பகுதியை சேர்ந்த பொது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் விவசாய நிலங்கள் குடியிருப்பு பகுதிகள் என கையகப்படுத்தப்பட இருப்பதால் அப்பகுதி மக்கள் கவலையில் உள்ளனர். மக்களை பற்றி கவலைப்படாமல் சுமார் 4800 ஏக்கர் பரப்பளவு நிலத்தை இந்த இரண்டாவது பசுமை விமான நிலையத்திற்கு கையகப்படுத்தும் முனைப்பில் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இதை எதிர்த்து ஏகனாபுரம், பரந்தூர் உள்ளிட்ட அனைத்து 13 கிராம பொதுமக்கள் தொடர்ந்து 145 வது நாட்களாகபோராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கோட்டை நோக்கி பேரணி என அறிவித்த நிலையில் இரு அமைச்சர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அதில் முடிவு எட்டப்படாததால் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
மேலும் அப்பகுதியில் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாத வண்ணம் இருக்க காவல்துறை 13 சோதனை சாவடிகளை அமைத்து நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் கண்காணிப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் நாளை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியை சந்தித்து மனு அளிக்க நடைபயணம் மேற்கொள்வதற்காக காவல்துறையிடம் அனுமதி கேட்டனர். இந்நிலையில் அவர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியும் ஒருங்கிணைப்பு குழு அதனை மறுத்ததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இந்த பேச்சுவார்த்தை குறித்து ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் இளங்கோ கூறுகையில் , விளைநிலங்கள், நீர்நிலைகள் மற்றும் குடியிருப்புகளை அகற்றக் கூடாது என தொடர்ச்சியாக அரசை வலியுறுத்தி வரும் நிலையில் நாளை போராட்டத்தை கைவிடுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டதால் அதற்கு மறுப்பு தெரிவித்து போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்ததாக கூறினார்.
மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சர் அன்னூர் பகுதியில் விவசாயிகள் அனுமதியின்றி விளைநிலங்கள் எடுக்கப்படாது என தெரிவித்த நிலையில், பரந்தூரில் மட்டும் அதற்கு விதிவிலக்கு இல்லையா எனவும் கேள்வி எழுப்பினர்.
விமான நிலையம் அமைக்க நீர்நிலைகள், விளைநிலங்களை ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம் என தெரிவித்து நாளை கண்டிப்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிப்போம் என்றும் கூறி உள்ளனர்.