பள்ளி வளாகத்தில் இருந்த மரத்தை வெட்டிய திமுக நிர்வாகி: பொதுமக்கள் எதிர்ப்பு
வாலாஜாபாத் அடுத்த திருமுக்கூடல் பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த 2004ல் இந்நாள் முதல்வர் ஸ்டாலினால் இந்த மரம் நடப்பட்டதாக கூறப்படுகிறது.
HIGHLIGHTS
வாலாஜாபாத் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் 2004ல் நட்ட மரத்தை, தற்போது வெட்டிய திமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சீனிவாசன் செயலுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மரம் வெட்டும் பணி தற்காலிகமாக நிறுத்தம்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த திருமுக்கூடல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 80க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.
இப்பள்ளி மாணவர்கள் வசதிக்காக திருமுக்கூடலில், பிள்ளையார் கோயில் தெரு மற்றும் புள்ளம்பாக்கம் சாலை ஆகிய இரண்டு இடங்களில் வகுப்பறைகள் செயல்பட்டு வந்தது. தற்போது பிள்ளையார் கோவில் தெருவில் இரண்டு மாதங்களுக்கு முன்பு கூடுதல் வகுப்பறை கட்டிட பணிகள் துவங்கப்பட்டது.
அதேபோல், அப்போதைய சட்டமன்ற உறுப்பினரான ஸ்டாலின் 2004ம் ஆண்டு திருமுக்கூடலில் திமுக சார்பில் கொடியேற்றி மற்றும் பொதுக்கூட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அந்த பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டு வைத்தார். அந்த மரம் தற்போது பெரியதாக வளர்ந்தது பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நிழல் தரும் வகையில் இருந்து வருகிறது.
இந்நிலையில் பள்ளியில் இருந்த மரத்தை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சீனிவாசன் என்பவர் திடீரென அனுமதியின்றி வெட்டு பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதி மக்கள் மரம் வெட்டுவதை கண்டித்து வாக்குவாதம் செய்ததால் மரம் வெட்டுவதை நிறுத்தி உள்ளனர்.
அதேபோல், பள்ளி சுற்றுசுவரில் மரங்களை பாதுகாப்போம், மழைநீர் சேமிப்போம், சுற்றுச்சூழல் பாதுகாப்போம் என்ற வாசகங்கள் எழுதப்பட்டு இருந்த போதிலும் மரங்களை அங்கேயே வெட்டி வைத்துள்ளனர்.
மேலும் கட்டுமான பொருட்கள் பள்ளியின் வகுப்பறைக்குள்ளேயே வைத்து பயன்படுத்தி வருகின்றனர். அதனால் மாணவர்கள் அனைவரும் மற்றொரு இடத்தில் செயல்படும் ஒரு கட்டிடத்தில் உட்கார கூட இட வசதி இல்லாமல் நெருக்கடியுடன் கடும் சிரமத்துடன் கல்வி கற்கின்றனர்.
எனவே பள்ளியில் தற்போது இருக்கும் மரத்தையாவது வெட்டாமல் பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதியில் சிலர் கூறிய போது, நிழல் தரும் மரங்கள் மிகவும் பயன் தரும் நிலையில் அதை பள்ளி கட்டிடத்திற்கு இடையூறாக இருப்பதாகவும் கூறி வெட்டியதாக நிர்வாகி தெரிவிப்பதாக கூறினர்.