குடியிருப்பு பகுதியில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்க எதிர்ப்பு
காஞ்சிபுரம் குடியிருப்பு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் சன்னதி தெருவில் அமைந்துள்ளது தனியார் மருத்துவமனை ஜனனி நர்சிங் ஹோம். இங்கு அனைத்து விதமான நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது தனியார் மருத்துவமனைகள் தங்களது மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க படுக்கை வசதிகள் அளிக்க வேண்டுமென தமிழகஅரசு கூறியது.
இதையடுத்து மருத்துவமனையின் பின்புறம் உள்ள தெரு பகுதி வழியாக கொரோனா சிகிச்சை மையம் அமைக்க சுகாதாரத் துறை அனுமதி அளித்ததாக கூறி அதற்கான கட்டமைப்பு வசதிகளை தனியார் மருத்துவமனை மேற்கொண்டது.
அப்பகுதியை சுற்றி குடியிருப்புகள் அதிகம் உள்ளதால் இங்கு மையம் அமைக்கப்பட்டால் நோய்ப் பரவல் எளிதாகும் எனவும் அதிக அளவில் சிறுவர்கள், ஏழை எளிய மக்கள் வசிக்கும் பகுதி என்பதால் இதற்கு அரசு அனுமதிக்கக் கூடாது என குடியிருப்புவாசிகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
மேலும் மருத்துவமனைக்கு சொந்தமான பகுதி சிறிய பகுதி என்பதால் ஆபத்து காலங்களில் நோயாளிகள் வெளியேறுவது சிரமத்தை ஏற்படுத்தும் எனவும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.