பரந்தூரில் விமான நிலையம் அமைக்க கிராம சபை கூட்டங்களில் 3 ஆவது முறையாக எதிர்ப்பு..
பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சுற்றுவட்டார ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் மூன்றாவது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
HIGHLIGHTS
சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் காஞ்சிபுரம் அருகேயுள்ள பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட 13 கிராமங்களை ஒருங்கிணைத்து சுமார் 4700 ஏக்கர் பரப்பளவில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்கப்படும் என அறிவிப்பு செய்தன.
புதிய விமான நிலையம் அமைக்க அந்தப் பகுதியில் உள்ள நீர்நிலைகள், விவசாய நிலங்கள், குடியிருப்புகள் உள்ளிட்ட பகுதிகள் கையகப்படுத்த உள்ளதை கண்டித்து பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட கிராம பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 98 ஆவது நாளாக இன்றும் போராட்டம் தொடர்ந்தது.
இந்நிலையில், உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டதன் அடிப்படையில், பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட அனைத்து கிராமங்களிலும் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் அரசு வழிகாட்டிய தீர்மானங்களுக்குப் பிறகு பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கிராம சபை கூட்டங்களில் பசுமை விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் வேறு இடத்தினை இதற்கு தேர்வு செய்ய வேண்டும் என்வும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு முன்பு சுதந்திர தினம் மற்றும் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி இரு நாட்களில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களிலும் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விளை நிலங்களையும், குடியிருப்புகளையும் கையகப்படுத்த அனுமதிக்க மாட்டோம் என இந்த கிராமங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தற்போது மூன்றாவது முறையாக விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மூன்று முறை கிராம சபை கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றியும், 98 ஆவது நாளாக போராட்டம் தொடர்ந்து வரும் நிலையிலும் தங்கள் பகுதிக்கு வந்து எந்தவொரு அமைச்சரும் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை என அந்தப் பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
தொடர்ந்து எதிர்ப்பு இருந்து வரும் நிலையிலும், நிலம் கையகப்படுத்தும் பணியில் அலுவலகங்களை நியமித்து அதற்கான வேலைகளில் அரசு ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். கடந்த சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெற்ற போது ஏகனாபுரம் கிராமத்தில் இருந்து ஊர்வலமாக தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணி நடத்த உள்ளதாக கிராம மக்கள் அறிவிப்பு செய்தனர்.
அந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் தலைவர்கள் என அனைவரும் கிராம மக்களை சந்தித்து குறைகளை கேட்டும், போராட்டத்திற்கு ஆதரவும் தெரிவித்தனர். இதற்கிடையே, சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் முன்னிலையில் கிராம நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று அரசு ஆலோசித்து செயல்படும் என தெரிவிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்பாட்டால் கோட்டையை நோக்கி செல்லும் பேரணி கைவிடப்பட்டதாகவும், அரசு கைவிடும் வரை போராட்டங்கள் நாள் தோறும் தொடரும் என்றும் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.