பட்டு சேலைக்கு ஜரிகை தர உத்திரவாத அட்டை: அசத்தும் கோ-ஆப்டெக்ஸ்.
கோ - ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் காஞ்சிபுரம் புகழ் பெற்ற பட்டு சேலைகள் விற்பனையும் அதில் சேர்க்கப்பட்ட சரிகைக்கு உத்தரவாதம் அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
கோ - ஆப்டெக்ஸ் என அனைவராலும் அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் கடந்த 1935 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு 88 ஆண்டுகள் வாடிக்கையாளர்களுக்கு சேவை புரிந்து வருகிறது.
மாறிவரும் வாடிக்கையாளர்களின் ரசனைகளுக்கு ஏற்ப அவர்களின் தேவைகள் அறிந்து புதிய வண்ணங்கள் புதிய வடிவமைப்பு என ஒவ்வொரு பண்டிகை காலங்களிலும் அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை தன் வசப்படுத்தி வருகிறது. மேலும் இந்த விற்பனை மூலம் கைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பு அளித்து வருகிறது.
அவ்வகையில் கோ ஆப்டெக்ஸ் வேலூர் மண்டலத்தின் கீழ் காஞ்சிபுரம் , வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை , திருப்பதி உள்ளிட்ட 12 விற்பனை நிலையங்கள் இயங்கி வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் முக்கிய பண்டிகையில் ஒன்றான தீபாவளி அடுத்த மாதங்களில் வர உள்ள நிலையில், 30% தள்ளுபடியுடன் சிறப்பு விற்பனையை விற்பனை நிலையங்கள் துவக்கி வருகிறது.
காஞ்சிபுரத்தில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், எம்.பி செல்வம், எம்எல்ஏ எழிலரசன், உள்ளிட்டோர் இணைந்து விற்பனையை துவக்கி வைத்து பார்வையிட்டனர்.
இந்த விற்பனையகத்தில் பருத்தி கழக சேலைகள் காட்டன் புடவைகள் ஆர்கானிக், கலங்காரி, ரெடிமேட் , குர்தீஸ் பேட்டிகள் என பல ரகங்கள் உள்ளது.
மேலும் பாரம்பரியமிக்க காஞ்சி பட்டு புடவைகளும் இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதில் பட்டுப்புடவை நெய்த நபரின் புகைப்படம் அவர் எடுத்துக் கொண்ட கால அளவு புடவைகளின் வண்ணங்கள் மற்றும் அதில் சேர்க்கப்பட்ட ஜரிகை குறித்தும் விபரங்களாக பட்டுப் புடவையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாது காஞ்சிபுரத்தில் பட்டுப் புடவைகள் எனக் கூறிக்கொண்டு விசைத்தறிகள் மூலம் உருவாக்கப்பட்ட போலிபட்டுகளை விற்பனை செய்து வரும் நிலையில் கோ - ஆப்டெக்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் பட்டுப்புடவைகளில் சேர்க்கப்பட்டுள்ள வெள்ளி தங்க ஜரிகை விவரங்களை அச்சிட்டு அதற்கான தர உத்தரவாத சான்றாக அட்டையை அளிக்கின்றனர்.
இதை பல ஆண்டுகள் கழித்தும் மத்திய அரசின் சார்பில் நடத்தப்படும் பட்டுப் புடவை தர பரிசோதனை மையத்தில் பரிசோதித்தால் சிறிய மாற்றங்கள் கூட இருக்காது என காஞ்சிபுரம் விற்பனை நிலைய மேலாளர் பெருமாள் தெரிவித்தார்.
இதுபோல சரிகை தரஉத்தரவாத அட்டையை தர இயலாது என்பதை வாடிக்கையாளர் தெரிந்து கொண்டால், பாரம்பரியம் மட்டுமல்லாது அதை நெசவு செய்யும் நெசவாளர்களின் வாழ்வாதாரம் மீண்டும் உயரும் என மண்டல மேலாளர் ஞானபிரகாசம் தெரிவித்தார்.