காஞ்சிபுரத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு.. காவல் கண்காணிப்பாளர் சுதாகர் பங்கேற்பு...
காஞ்சிபுரத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தொடங்கி வைத்தார்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்ட இந்திய மருத்துவ சங்கம் சார்பில், சாலை பாதுகாப்பு வாரம் ஜனவரி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதில் சாலை விதிகளை கவனமாக கடைபிடித்தல், இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிதல், காரில் பயணம் செய்யும்போது சீட்பெல்ட் அணிதல், அதிவேகம் அதிக ஆபத்து உள்ளிட்ட வாசகங்களை முன்னிறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
துவக்க விழாவாக காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் அருகே, காஞ்சி மாவட்ட மருத்துவ சங்க தலைவர் மணோகரன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகளுக்கு வழங்கினார்.
மேலும், ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் மற்றும் பரிசு பொருட்களை வழங்கி வாழ்த்து தெரிவித்து மற்ற வாகன ஓட்டிகளும் இதை கடைபிடிக்க வேண்டும் என காவல் கண்காணிப்பாளர் சுதாகர் அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில், காவல் துணை கண்காணிப்பாளர் ஜூலியஸ் சீசர், ஆய்வாளர் விநாயகம், போக்குவரத்து துணை ஆய்வாளர் ரவி உள்ளிட்ட காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மருத்துவர்கள், சாலை விபத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். மேலும், துண்டு பதாகைகளை கையில் ஏந்தியபடி சாலையில் சென்று மருத்துவர்கள் விப்புணர்வை ஏற்படுத்தினர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த காலங்களைவிட சாலை விபத்துக்கள் பெருமளவில் குறைந்துள்ளது என்றும் முழுமையாக விழிப்புணர்வு ஏற்படுத்தி விபத்திலா மாவட்டமாக இருக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் முயற்சி எடுக்கப்படும் என்றும் எஸ்பி சுதாகர் தெரிவித்தார்.