காஞ்சிபுரம் அறம் வளத்தீஸ்வரர் கோயிலில் திருப்பணிகள் தீவிரம்
காஞ்சிபுரம் அறம் வளத்தீஸ்வரர் திருக்கோயிலுக்கு விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதையொட்டி திருக்கோயில் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அறம் வளத்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் மூலவரான அறம் வளத்தீஸ்வரர் அழகான சிவலிங்கத் திருமேனியாக காட்சியளிக்கிறார்.
முனிவர்கள் பலரும் வந்து வழிபட்ட பெருமைக்குரிய இத்தலம் 1972 ஆம் ஆண்டுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் ஆலயத்தை சுற்றி வசிக்கும் பொதுமக்கள்,பக்தர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நிதி வசூலித்து அறநிலையத்துறை அதிகாரிகளின் வழிகாட்டுதலுடன் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.
அறம் வளத்தீஸ்வரர் கோயில் என்பது மருவி வளத்தீஸ்வரர் கோயில் என தற்போது பக்தர்களால் அழைக்கப்படுகிறது.இது குறித்து அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறியது..
இக்கோயில் வளாகத்துக்குள் பரிவார தெய்வங்களாக இருந்த மந்திர கணபதி,செல்வ கணபதி ஆகிய தெய்வங்களின் உபகோயில்கள் சிதிலமடைந்து இருந்தன.
இவையிரண்டும் புதியதாக கட்டப்பட்டு வருகிறது.இது தவிர மூலவர், பைரவர்,சண்டிகேசுவரர்,நவக்கிரக சந்நிதிகள் ஆகியனவும் புதுப்பிக்கப்பட்டு வர்ணம் பூசப்படவுள்ளது.
கும்பாபிஷேக திருப்பணிச் செலவுக்காக ரூ.5.82லட்சம் மதிப்பீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.சுமார் 30 சதவிகித திருப்பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
இரு மாதங்களில் பணிகளை முடித்து விரைவில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.