சொந்த வீடு, நிலம் இல்லாதவர்களுக்கு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடு
காஞ்சிபுரத்தில் சொந்த வீடு, நிலம் இல்லாதவர்கள் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் வீடுகளை பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மூலம் கீழ்கதிர்பூர் பகுதியில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 2112 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்க தயார் நிலையில் உள்ளன.
இவற்றில் 1406 குடியிருப்புகள் வேகவதி நதிக்கரையில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 706 குடியிருப்புகளுக்கு விருப்பம் உள்ள பயனாளிகள் விண்ணபிக்கலாம்.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாளிகள் காஞ்சிபுரம் பெருநகராட்சி மற்றும் சுற்றியுள்ள ஊராட்சிப் பகுதியில் வசிப்பவர்கள், அரசுக்கு சொந்தமான நீர் நிலைகள், அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருந்து வரும் ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் வீடற்ற பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மேலும் பயனாளிகள் பட்டியல் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பரிந்துரைக்கப்பட்டு அவர்களுக்கு இத்திட்டப்பகுதியில் குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்படும்.
மேலும், இத்திட்டத்தில் ஒரு குடியிருப்புக்கான செலவுத்தொகையில் மத்திய மற்றும் மாநில அரசின் மானியத் தொகை போக மீதமுள்ள ரூ. 1.50 லட்சத்தை பயனாளிகளின் பங்குத் தொகையாக செலுத்த வேண்டும்.
மேலும் இந்தியாவில் தனது பெயரிலோ, தனது குடும்ப உறுப்பினர் பெயரிலோ சொந்த வீடு இல்லாமலும், வருட வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும் சான்றளிக்க வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் பயனாளிகள் குடும்பத் தலைவர் மற்றும் குடும்பத் தலைவி ஆகியோரின் ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் நல்லுறவு கூட்டரங்கத்தில் ஆகஸ்ட் 4 ஆம் தேதி காலை 11.00 மணியளவில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்.