மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி:சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் தொடக்கம்
காஞ்சிபுரம் மாவட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியினை சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் துவக்கி வைத்தார்.
HIGHLIGHTS
சர்வதேச 44வது ஒலிம்பியாட் செஸ் திருவிழா இன்னும் சில தினங்களில் மாமல்லபுரத்தில் துவங்க உள்ள நிலையில் இதுகுறித்த விழிப்புணர்வு பல்வேறு வகைகளில் பள்ளி மாணவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான சதுரங்க போட்டி வட்டார அளவில் நடைபெற்று அதில் 90 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு இன்று மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி ராணி அண்ணாதுரை மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இப்போட்டியினை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் மற்றும் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் துவக்கி வைத்தனர். இதில் சிறப்புரை ஆற்றிய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி , இப்போட்டிகள் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையும் , ஒன்பதாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையும் , மற்றும் மேல்நிலை வகுப்புகள் என மூன்று பிரிவுகளில் நடைபெறுகிறது.
இதில் நான்கு வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வரும் 27ஆம் தேதி விமான மூலம் பெங்களூருக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர். மேலும் மாமல்லபுரம் நடைபெறும் போட்டியை காணவும் இவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.இரண்டாம் பரிசு பெற்றவர்கள் மாமல்லபுரம் போட்டியை காணவும் சர்வதேச வீரர்களுடன் உரையாடல் செய்யவும் வாய்ப்பளிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது என்றார்.
விழாவில் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கிய காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் , சர்வதேச நாடுகள் ஒலிம்பியாட் செஸ் திருவிழா துவங்க அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு பெற்றுள்ள நிலையில் , தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் இப்போது காண இவர்களுக்கான சதுரங்க போட்டி நடத்தப்பட்டு அதில் தேர்வு செய்யப்பட உள்ள மாணவ, மாணவிகள் பெறுவது பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது.
மேலும் தமிழக முதல்வர் விளையாட்டுத் துறையின் உள்ள ஆர்வம் காரணமாக காஞ்சிபுரம் அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியில் ஒருங்கிணைந்த விளையாட்டு பயிற்சி மையத்தை அமைக்க உள்ளார் என்பதும், இதன் மூலம் பலர் தங்கள் விளையாட்டு திறமைகளை நிரூபிப்பார்கள் என்பது ஐயமில்லை என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சிகளை காஞ்சிபுரம் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சி.விஸ்வநாதன் ஏற்பாடு செய்திருந்தார். இதில் மாமன்ற உறுப்பினர் மல்லிகாராமகிருஷ்ணன், கமலக்கண்ணன் , மாவட்ட கல்வி அலுவலர் , உடற்கல்வி ஆசிரியர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.