ரூ.32 லட்சம் மதிப்பிலான கோவில் குளம் புனரமைப்பு பணி மீது அதிருப்தி
காஞ்சிபுரம் அருகே ரூ.32 லட்சம் மதிப்பிலான கோவில் குளம் புனரமைப்பு பணி மீது அதிருப்தி இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் அடுத்த ஐயங்கார் குளம் பகுதியில் ரூ.32 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்டு வரும் திருக்குளக்கரை தரமில்லாததால் சரிந்து போனது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோயில் நகரம் என புகழப்படும் காஞ்சிபுரத்தில் மட்டுமில்லாது அதன் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலும் புகழ்பெற்ற திருக்கோயில்கள் பல நூறு அமைந்துள்ளன. இத்திருக்கோயில்களை ஒட்டியுள்ள குளங்களில் பக்தர்கள் புனித நீராடி அதன் பின் சாமி தரிசனம் மேற்கொள்ளும் வகையில் அமைந்துள்ளன.
அவ்வகையில் காஞ்சிபுரம் அடுத்து அமைந்துள்ளது புகழ் பெற்ற கிராமம் ஐயங்கார்குளம். இக்கிராமத்தில் புகழ்பெற்ற சஞ்சீவிராயர் திருக்கோயில், கைலாசநாதர் திருக்கோயில், மகாலட்சுமி திருக்கோயில் என பல புகழ்பெற்ற திருக்கோயில்கள் அமைந்துள்ளன.
புகழ் பெற்ற பல கோயில்கள் இருந்தாலும் இந்த திருக்கோயில்கள் முழுமையாக புனரமைக்கப்படுவதில்லை என பொதுவான குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்நிலையில் ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயிலையொட்டி சுமார் 2ஏக்கர் பரப்பளவில் இரு திருக்குளங்கள் அமைந்துள்ளது.
இந்த திருக்குளங்கள் பராமரிப்பின்றி கிடப்பதாக அப்பகுதி பக்தர்கள் இந்து சமய அறநிலையத்துறை, ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முதல்வர் தனிப்பிரிவு என பல இடங்களில் புகார் மனு அளித்துள்ளனர். இதன் வாயிலாக காஞ்சிபுரம் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திட்டம் தயாரிக்கப்பட்டு ரூ. 32 லட்சம் மதிப்பீட்டில் இத்திருக்குளம் தூர்வாரப்பட்டு புனரமைக்கும் பணி கடந்த மே மாதம் துவங்கியது.
இந்தப் புனரமைப்பு பணியை தனியார் கட்டுமான ஒப்பந்ததாரர் எடுத்திருந்த நிலையில் அரசு விதிகளின்படி அந்த புனரமைப்பு பணி சரிவர மேற்கொள்ளவில்லை.
குறிப்பாக திருக்குளத்தின் நடுவில் ஆழப்படுத்துதல் , கரைகளை முறையான கட்டுமானம் செய்து கட்டுதல் உள்ளிட்ட பணிகளை இந்த ஒப்பந்த நிறுவனம் முறையாக செய்யாமல், தற்போது வரை இப்பணி நிறைவு பெற்றதா என்பதை தெரிவிக்கும் வகையில் அறிவிப்பு பலகையும் இத்திருக்குளத்தில் வைக்கவில்லை.
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக பெய்த மாண்டஸ் புயல் கனமழை காரணமாக காஞ்சிபுரம் வட்டத்தில் மட்டும் 363 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக திருக்குள கரையின் ஒரு பகுதி கோயிலை ஒட்டி சரிந்து கட்டுமானம் தரமற்றது என்பதை நிரூபித்துள்ளது. மேலும் திருக்குளத்தின் சுற்றிலும் ஆங்காங்கே மண் சரிவு காரணமாக ஓட்டை விழுந்துள்ளது.
இந்தக் கட்டுமான பணிகளை துவங்கிய நாள் முதல் இதுவரை எந்த இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளும் வந்து ஆய்வு செய்யவில்லை என்பதை தனக்கு சாதகமாக்கி ஒப்பந்ததாரர் தரமற்ற முறையில் பணிகள் செய்துள்ளதாக அப்பகுதி பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ரூபாய் 32 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட பணி இதுவா என்ற கேள்வி பார்த்தவுடன் அனைவரையும் கேட்க வைக்கும் வகையில் உள்ளது.