/* */

ஸ்ரீபெரும்புதூர்-வாலாஜா ஆறு வழிச் சாலைப் பணிகளை விரைவுபடுத்த முதல்வர் கடிதம்

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார்

HIGHLIGHTS

ஸ்ரீபெரும்புதூர்-வாலாஜா ஆறு வழிச் சாலைப் பணிகளை விரைவுபடுத்த முதல்வர் கடிதம்
X

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்.

தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூர் முதல் வாலாஜாபேட்டை வரையிலான சாலையில் ஆறு வழிச் சாலைப் பணிகளை விரைவுபடுத்தவும். சாலைகளை நல்ல நிலையில் பராமரிக்கவும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கிடவும், மத்திய அரசின் திட்டங்களுக்குத் தேவையான ஒத்துழைப்பினை தமிழ்நாடு அரசு வழங்கும் எனத் தெரிவித்தும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், சென்னையில் இருந்து இராணிப்பேட்டை (NH-4) வரை இருக்கும் சாலையின் நிலையை மேம்படுத்திட வேண்டுமென தயாநிதி மாறன் எம்.பி நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார். இந்தச் சாலை சென்னை நகரம் மற்றும் அதன் துறைமுகங்களில் இருந்து காஞ்சிபுரம், வேலூர், இராணிப்பேட்டை, ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு முக்கிய இணைப்பை வழங்குகிறது.

இந்தச் சாலையின் தற்போதைய நிலைமை மிகவும் மோசமாக உள்ளதால் சமீபத்தில் ஒரு சில மாவட்டங்களுக்கு, இரயிலில் செல்ல நேரிட்டது. இந்தச் சாலை தொடர்பான தங்களது நாடாளுமன்ற உறுப்பினரின் கோரிக்கை முக்கியமானதாக இருந்தபோதிலும், நாடாளுமன்றத்தில் மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் அளித்துள்ள பொதுவான மற்றும் உறுதியற்ற பதில் ஏமாற்றமளிப்பதாக உள்ளது.

தமிழ்நாட்டில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்டங்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. குறிப்பாக, சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான உயர்மட்ட விரைவுச் சாலைத் திட்டத்திற்கு, சாத்தியமான எல்லா உதவிகளையும் தமிழ்நாடு அரசு வழங்குவதன் மூலம் அந்தத் திட்டம் புத்துயிர் பெற்றுள்ளது. கடந்த காலத்தில் வழங்கப்படாத பல்வேறு சலுகைகள் மற்ற பெரிய NHAI திட்டங்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைத் திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்துவதைக் கண்காணிக்க மாநிலத் தலைமையகத்தில் சிறப்புப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வனத் துறை அனுமதி பெறப்படுவது தொடர்பாக அவ்வப்போது ஆய்வு செய்யப்படுகிறது. எந்தவொரு பெரிய தேசிய நெடுஞ்சாலை திட்டமும் அத்தகைய அனுமதிகளுக்காக நிறுத்தி வைக்கப்படவில்லை. நிலம் கையகப்படுத்துதல் மற்றும் குவாரி மண் எடுக்க அனுமதி வழங்குதல் போன்றவற்றில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மேற்கொள்ளும் பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக தலைமைச் செயலாளர் மட்டத்தில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பொருட்களுக்கான விலை. உரிமத் தொகை மற்றும் தீர்வை வரிக் கட்டணத்தை தள்ளுபடி செய்வது, இலவசமாக மண் எடுக்க அனுமதி போன்ற மற்ற கோரிக்கைகள் பரிசீலனையில் உள்ளது. என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த கடிதத்தில், இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் வேளையில், மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் அளித்த பதிலால், மாநில அரசு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் ஒத்துழைக்கவில்லை என்பது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது துரதிர்ஷ்டவசமானது. மாநில மற்றும் ஒன்றிய அரசுகளால் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு இடையே பாரபட்சம் காட்டாமல், அனைத்து முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களையும் விரைவுபடுத்த தங்களால் முடிந்த அனைத்தையும் அரசு மேற்கொண்டு வருகிறது. .

நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறன் எம்.பி, குறிப்பிட்ட கோரிக்கையைப் பரிசீலிக்க, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகளை ஒன்றிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வழங்கிட வேண்டும் தேசிய நெடுஞ்சாலை-4-ல், ஸ்ரீபெரும்புதூர் முதல் வாலாஜாபேட்டை வரையிலான ஆறு வழிப்பாதைப் பணி, ஒப்பந்ததாரர்களுக்கும். இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தப் பிரச்னையால் பணிகள் கிடப்பில் போடப்பட்டு தற்போதுள்ள சாலையின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.

2020-டிசம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சின்னசமுத்திரம் சுங்கச்சாவடிகளில் இதுபோன்ற மோசமான பராமரிப்பு காரணமாக சுங்கச்சாவடி கட்டணத்தை 50 விழுக்காடு குறைத்தது குறிப்பிடத்தக்கது. சாலைகளின் மோசமான நிலைமை காரணமாக பயணர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நற்பெயருக்குக் கனங்கத்தை ஏற்படுத்தியுள்ளன

எனவே இவற்றைக் கருத்தில் கொண்டு, ஸ்ரீபெரும்பதூர் முதல் வாலாஜாபேட்டை வரையிலான சாலையில் (NH-4) ஆறு வழிச் சாலைப் பணிகளை விரைவுபடுத்தவும் சாலைகளை நல்ல நிலையில் பராமரிக்கவும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதோடு ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து வழங்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.

Updated On: 11 Feb 2023 10:30 AM GMT

Related News