காஞ்சிபுரம் அருகே ரூ.2 கோடி மதிப்பிலான அரசு ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
காஞ்சிபுரம் அருகே 2 ஏக்கர் நீர்நிலை ஆக்கிரமிப்பு நிலத்தை மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையிலான குழு மீட்டது.
HIGHLIGHTS
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி தமிழகம் முழுவதும் நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை மேற்கொள்ள வருவாய் துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் உத்தரவின்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நீர் நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்பு நிலங்களை வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் தாலுகா சிட்டியம்பாக்கம் கிராமத்தில் வாலாஜாபாத் ஓன்றியகுழு தலைவர் தேவேந்திரன் குடும்பத்தினர் நீர்நிலை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து பல ஆண்டு காலமாக தாபா ஹோட்டல் நடத்தி வந்தனர்.
மாவட்டம் முழுவதும் உள்ள நீர்நிலை புறம்போக்கு குறித்து வருவாய் துறையினர் ஆய்வு மேற்கொண்ட நிலையில் சிட்டியம்பாக்கம் நீர்நிலை புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு குறித்து கண்டறிந்தனர்.
இதைத் தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற 2 முறை அறிவிப்பு வழங்கிய நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் ஆளும் கட்சி உள்ளாட்சி பிரதிநிதிகள் குடும்பத்தினர் இருந்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையில் காஞ்சிபுரம் தாசில்தார் பிரகாஷ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடியாக சிட்டியபாக்கம் கிராமத்திற்கு சென்று ஆளுங்கட்சி உள்ளாட்சி பிரதிநிதியின் தாபா ஓட்டல் ஆக்கிரமிப்புகளை அகற்றி சுமார் ரூ. 2 கோடி மதிப்புடைய 2.06 ஹெக்டேர் நீர்நிலை புறம்போக்கு நிலத்தை அதிரடியாக மீட்டு அறிவிப்புப் பலகையை வைத்தனர்.
ஆளும் கட்சி பிரமுகரின் ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகளின் செயலால் சிட்டியம்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.