காஞ்சிபுரம் அருகே குமரக்கோட்டம் முருகன் கோவிலில் சூரசம்ஹாரம்
காஞ்சிபுரம் அருகே குமரக்கோட்டம் முருகன் கோவிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி மிக விமரிசையாக நடைபெற்றது.
HIGHLIGHTS
தமிழகமெங்கும் உள்ள முருகன் திருக்கோயிலில் கடந்த 25 ஆம் தேதி கந்த சஷ்டி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆறு நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் நாள்தோறும் முருகப்பெருமான் பல்வேறு வாகனங்களில் பல்வேறு மலர் அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்து வந்தார்.
அவ்வகையில் காஞ்சிபுரம் குமரக்கோட்டம் திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சண்முகநாதர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மலர் அலங்காரங்களில் ராஜ வீதிகளை வலம் வந்தார்.
கந்த சஷ்டி விழா நடைபெறும் ஆறு நாட்களும் பக்தர்கள் சஷ்டி விரதம் இருந்து கோயிலின் வெளிப்பிரகாரத்தை 108 முறை நாள்தோறும் வலம் வந்து தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றி வந்தனர்.
இது மட்டுமில்லாமல் காலை மற்றும் மாலை வேலைகளில் லட்சார்ச்சனை பெருவிழாவில் தாராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது குடும்ப உறுப்பினர்கள் பெயர்களை கூறி அர்ச்சனை செய்து பிரசாதங்கள் பெற்று சென்றனர்.
கந்த சஷ்டி விழாவில் இன்று சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார திருவிழா நடைபெற்றதால் காலை முதலே காஞ்சிபுரத்தில் உள்ள குமரக்கோட்டம் திருக்கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
காஞ்சிபுரம் உப தலைவர் பரமசிவம்தெருவில் உள்ள ஸ்ரீ ரேணுகாம்பாள் ஆலயத்தில் இருந்து சூரபதுமன் , சிங்கமுகாசூரன், தாருகாசூரன் , பானுகோபன், இரண்யன், அக்னிமுகன், வஜ்ஜிரவாகு ஆகியோர் வேடமணிந்து நடனமாடி காஞ்சிபுரம் அங்கு ஸ்ரீ சுப்பிரமணியர் வேடமணிந்த சிறுவன் சூர்யாவுடன் , புத்தேரி தெரு ஏகாம்பரநாதர் கோயில் சன்னதி தெரு பாண்டவ பெருமாள் கோயில் தெரு , ராஜவீதி வழியாக காஞ்சி திருக்குமரக்கோட்டத்தை அடைந்தனர்.
வழியெங்கிலும் நடனம் ஆடி பக்தர்கள் புடை சூழல திருக்கோயில் அடைந்தவுடன் சூரசம்ஹார பாடல்கள் பாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து வீரபாகு தூதுவும் அதனைத் தொடர்ந்து சூரசம்ஹாரம் மிகவும் விமரி சையாக நடைபெற்றது.
இதேபோன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வல்லக்கோட்டை முருகன் கோயில், குன்றத்தூர் பாலசுப்பிரமணியர் திருக்கோயில், இளையனார் வேலூர் பாலசுப்பிரமணிய கோயில் மற்றும் அனைத்து முருகன் திருத்தலங்களிலும் இன்று இரவு சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழாவில் விரதம் இருந்த முருக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சூரசம்ஹார நிகழ்ச்சி கண்டு முருகப்பெருமான் அருள் பெற்றனர். நாளை சஷ்டி நிறைவு விழாவையொட்டி நாளை மாலை 4 மணி அளவில் தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடைபெறும்.
இதேபோல் தமிழகத்தில் உள்ள முருகனின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய திருத்தலங்களிலும் சூரசம்ஹார திருவிழா நடைபெற்றது. இந்த விழாக்களில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.