ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் அக்னி வசந்த உற்சவ பெருவிழா: கொடியேற்றத்துடன் துவக்கம்
பாண்டவ சமேத ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் அக்னி வசந்த விழா, 23 நாட்கள் மகாபாரத சொற்பொழிவு, தெருக்கூத்து ஆகியவை நடைபெறுகிறது.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பஞ்சுபெட்டை பெரிய தெருவில் அமைந்துள்ளது அருள்மிகு பாண்டவர் சமேத ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயம். இங்கு சித்திரை மாதம் அக்னி வசந்த உற்சவ பெருவிழா நடைபெறுவது வழக்கம். முதல் நாளான இன்று சர்வ தீர்த்த குளத்தில் இருந்து கங்கை நீர் திரட்டி சகல வாத்தியங்களும் ஊர்வலமாக திருக்கோயிலுக்கு எடுத்து வரப்பட்டது.
அதனைத் தொடர்ந்து புனிதநீர் ஸ்ரீ திரௌபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டபின் சிறப்பு அலங்காரத்தில் ராதா ருக்மணி சமேத ஸ்ரீ வேணுகோபால சுவாமி துரோபதி அம்மன் மற்றும் அர்ஜுன பெருமாள் ஆகியோர் சிறப்பு வண்ண அலங்கார மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கொடிமரம் முன்பு எழுந்தருளினர். அதன்பின் திருக்கோயில் கருடன் மற்றும் ஆஞ்சநேயர் சுவாமிகள் படங்கள் வரையப்பட்டு சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்றம் நடைபெற்றது. அதன் பின் கொடிமரத்திற்கு சிறப்பு தீபாரதனை செய்யப்பட்டு அக்னி வசந்த விழா துவங்கப்பட்டது.
இவ்விழா இன்று பரமன் வணக்கம் எனும் பாரத தொடக்கம் துவங்கி நாள்தோறும் மகாபாரத சொற்பொழிவு மற்றும் நாடகம் தெருக்கூத்து ஆகிய வகையில் இருபத்தி மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இருபத்தி ஒன்பதாம் தேதி சிறப்பு பால்குட அபிஷேகம், 30ஆம் தேதி ஊஞ்சல் உற்சவம் நடைபெற உள்ளது. அருள்மிகு பாண்டவ சமேத ஸ்ரீ திரௌபதி அம்மன் இறைப்பணி அறக்கட்டளை குழு விழா ஏற்பாடுகளை செய்து வருகிறது.