ஷீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேக விழா
திண்டுக்கல் பாரதிபுரத்தில் உள்ள ஸ்ரீ ஷீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.
திண்டுக்கல் நாகல்நகர் பாரதிபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஷீரடி சாய்பாபா ஆலய மஹா கும்பாபிஷேக விழாவை ஒட்டி கடந்த 25 ஆம் தேதி காலை 10 மணிக்கு மேல் விநாயகர் வழிபாடு, மகா சங்கல்பம், மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம் உள்ளிட்ட மகா ஹோமங்கள் நடைபெற்றது. இதையடுத்து மாலை 6 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் விஷேந்தி, முதற்கால வேள்வி, வருண வழிபாடு, குலதெய்வ வழிபாடு, பிரவேசபலி உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.
இந்நிலையில் கும்பாபிஷேக தினத்தன்று காலை 7 மணிக்கு ஆறாம் கால வேள்வி விஷேசஸந்தி, பிம்பசுத்தி, ஸ்பர்சாகுதி, கோ பூஜை, தன்பூஜை மற்றும் தச தரிசனம், கனி மூலிகை ஹோமம், மஹா பூர்ணாகுதி பேரொளி வழிபாடு நடைபெற்றது. 10.15 மணி அளவில் கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 10.30 மணி அளவில் மூலஸ்தான அபிஷேகம், அலங்காரம், போற்றி வழிபாடு மற்றும் சாய்பாபா திருவுருவத்திற்கு புஷ்பாஞ்சலி மற்றும் மங்கள ஆரத்தி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.