கடலூர் பெரியார் கலைக்கல்லூரியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
பெரியார் கலைக்கல்லூரியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் மேயர் சுந்தரிராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்
HIGHLIGHTS
கடலூர் பெரியார் கலைக்கல்லூரியின் மாற்றுத்திறனாளிகள் நல அலகு, கடலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து நடத்திய மாற்றுத்திறனாளிகள் தின விழா மற்றும் கல்வி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கல்லூரி முதல்வர் ஜோதி வெங்கடேசுவரன் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், மாற்றுத்திறனாளிகள் என்னும் பெயரினைச் சூட்டிய கருணாநிதி வழியில் தமிழக முதல்வர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையினை தம் பொறுப்பில் வைத்துக்கொண்டு சிறப்பாக கவனித்து வருகின்றார். கல்லூரியில் மாற்றுத்திறனாளிகள் மாணவர்களுக்கு கடலூர் மாநகராட்சி தேவையான உதவிகளை வழங்கும் என தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு தொழிலாளர் ஈட்டுறுதிக்கழக இயக்குநர் மருத்துவர் இராஜ மூர்த்தி கலந்து கொண்டு மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கல்வி நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
விழாவில் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் பாரி, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அறிவியல் மன்ற ஒருங்கிணைப்பாளர் பிரான்சிஸ்கா, திருக்குறள் பேரவை தலைவர் அரிமா பாஸ்கரன், முடநீக்கியல் மருத்துவர் சித்ரா ஆகியோர் உரையாற்றினர்.
விழாவில் 20 மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கல்வி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. விழாவில் பல்வேறு துறைகளின் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.