சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை
சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் தீர்ப்பு
HIGHLIGHTS
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகிலுள்ள பெரியகண்ணாடி காலனியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மகன் சூரியமூர்த்தி (25). டிப்ளமோ படித்து விட்டு கூலி வேலை செய்து வந்தார். இவர், 10 ஆம் வகுப்பு படித்திருந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி வந்துள்ளார்.
இதனால், 17-3-2020 அன்று அந்த சிறுமியை திருச்சிக்கு கடத்திச் சென்றுள்ளார். பின்னர், தம்பிப்பேட்டைக்கு உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கு அவரை பாலியல் பலாத்காரம் செய்தாராம்.இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆய்வாளர் விஷ்ணுபிரியா வழக்குப்பதிவு செய்து சூரியமூர்த்தியை கைது செய்தார்.
இந்த வழக்கின் விசாரணை கடலூர் போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று நீதிபதி எம்.எழிலரசி தீர்ப்பு கூறினார். அதில், சூரியமூர்த்திக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இதனையடுத்து, அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசிடமிருந்து ரூ.5 லட்சம் பெற்று மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் 30 நாட்களுக்குள் வழங்க வேண்டுமென நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டதாக அரசு தரப்பு வழக்கறிஞர் எஸ்.கலாசெல்வி கூறினார்.