தெற்கு ரயில்வேக்கு ரூ.1,799 கோடி இழப்பு: அதிகாரிகள் தகவல்
தமிழகத்தில் ஊரடங்கு பொது முடக்கம் காரணமாக தெற்கு ரயில்வேக்கு ரூ.1,799 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
HIGHLIGHTS
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஒன்றை வருடங்களாக ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படாததால் தெற்கு ரயில்வே துறைக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
அதாவது தெற்கு ரயில்வேக்கு ஆண்டுக்கு ரூ.3,500 கோடிக்கும் மேல் வருவாய் வரும் நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக முறையாக ரயில்கள் இயக்கப்படாதலும், பயணிகள் இல்லாததால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதன் காரணமாகவும் ரூ.1,799 கோடி தெற்கு ரயில்வேக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
2019-20ம் ஆண்டில் 50 கோடி பேர் ரயில்களில் பயணம் செய்துள்ளனர். ஆனால் 2020-21ம் ஆண்டில் கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக 20% பயணிகள் மட்டுமே முன்பதிவு செய்ததால் பெரும்பாலான ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. இதனால் 7 கோடியே 64 லட்சம் பேர் மட்டுமே ரயில் சேவையை பயன்படுத்தியதால் டிக்கெட் மூலம் வரும் வருவாய் பெருமளவு குறைந்துள்ளது.
மேலும் 2019-20ம் ஆண்டில் சரக்கு கட்டணம் மற்றும் பிளாட்பார கட்டணம் ரூ.3,202 கோடி வருவாய் வந்த நிலையில் இந்த ஆண்டு 1,407 கோடி மட்டுமே வருவாய் கிடைத்துள்ளது. இதனால் தெற்கு ரயில்வேக்கு ரூ.1799 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.