குடியரசு தினவிழா அலங்கார ஊர்திகள் செங்கல்பட்டு வருகை
செங்கல்பட்டு வந்த சென்னை குடியரசு தினவிழா அலங்கார ஊர்திகளை கலெக்டர் ராகுல்நாத், எஸ்பி அரவிந்தன் மலர்தூவி வரவேற்றனர்
HIGHLIGHTS
சென்னை மெரினா கடற்கரையில் குடியரசு தின விழாவில் தமிழக அரசின் சார்பில் பங்கேற்ற அலங்கார ஊர்திகள் செங்கல்பட்டு வருகை தந்தன. அப்போது அந்த ஊர்திகளில் இடம்பெற்றிருந்த விடுதலை போராட்ட வீரர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டன.
அப்போது தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் வகையிலும், விடுதலை போராட்ட வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையிலும் கரகாட்டம், ஒயிலாட்டம், பரதநாட்டியம், கோலாட்டம், காவடியாட்டம், தப்பாட்டம், நாதஸ்வர இசையுடன் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில் மாவட்ட எஸ்பி அரவிந்தன், மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவேல்ராஜ், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஸ் பச்சோரா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலா மேரி, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்கள். இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.