கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் பகுதிகள் : வீடுகளை சுற்றி தேங்கி நிற்கும் மழைநீர்
கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் பகுதிகளில் மழை நின்று 2 நாட்கள் ஆகியும் வீடுகளை சுற்றி தேங்கி நிற்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
HIGHLIGHTS
செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விட்டுவிட்டு பெய்த கனமழையின் காரணமாக நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் மகாலட்சுமி நகர், அமுதம் காலனி, உதயசூரியன் நகர், ஜெயலட்சுமி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளை சுற்றி மழை வெள்ளம் தேங்கியது.
கடந்த 2 நாட்களாக மழை பெய்யாமல் உள்ள நிலையில் ஏற்கனவே பெய்த மழையின் காரணமாக தேங்கி நிற்கும் மழை நீர் இன்னும் வடியாமல் அப்படியே 2 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கிய நிலையில் உள்ளது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில்:-கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக கனமழை பெய்யும் போது எங்கள் பகுதியில் தொடர்ந்து வீடுகளில் மழை நீர் புகுவதும், வீடுகளை சுற்றி மற்றும் சாலைகளில் மழைநீர் 2 அடி உயரத்துக்கு மேல் தேங்கி நிற்பதும் வாடிக்கையாகிவிட்டது.
மழை பெய்யும் போது மட்டும் அதிகாரிகள் வந்து உங்களது பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்று கூறி விட்டு செல்வார்கள். பின்னர் அடுத்த ஆண்டு மீண்டும் வந்து இதே விஷயத்தை கூறுவார்கள். ஆனால் இதுவரைக்கும் இந்த பகுதியில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்கு எந்தவிதமான நடவடிக்கைகளும் பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள் எடுக்காமல் மெத்தனப்போக்கை மட்டுமே காட்டி வருகின்றனர்.
இதேபோல ஊரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள எம்.ஜி.நகர், ஜெகதீஷ் நகர், செல்வராஜ் நகர் உள்ளிட்ட பல்வேறு நகர் பகுதியில் கடந்த 2 நாட்களாக மழை விட்ட நிலையிலும் வீடுகளை சுற்றி மழைநீர் தேங்கி நிற்கிறது. இந்த பகுதியில் ஒவ்வொரு ஆண்டு மழை பெய்யும் போதும் இதே நிலைமை நீடிக்கிறது என்று அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஊரப்பாக்கம் பகுதியில் மழைநீர் வீடுகளை சுற்றி தேங்காமல் இருப்பதற்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பல்வேறு ஊர்களில் உள்ள நகர் பகுதிகளில் மழைநீர் இன்னும் வடியாமல் தேங்கி நிற்பதை காணமுடிகிறது. மழை வெள்ளம் தேங்காமல் இருக்க தீர்வு காணவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.