போலி ஆவணம் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட பெண் உள்பட 4 பேர் கைது
செங்கல்பட்டு அருகே போலி ஆவணம் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்
HIGHLIGHTS
செங்கல்பட்டு மாவட்டம் , கூடுவாஞ்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஊரப்பாக்கம் பகுதியில் சிலர் போலியாக அரசு ஆவணங்களை தயார் செய்து மோசடியில் ஈடுபடுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜியகுமார் உத்தரவின் பேரில் , ரகசிய விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் ஊரப்பாக்கம் ரயில்வே ஸ்டேசன் சாலையில் உள்ள ஜெராக்ஸ் கடையில் வேலை செய்யும், ஊரப்பாக்கத்தை சேர்ந்த நந்தினி அவரது கணவர் பாலாஜி மற்றும் சிலர் கூட்டாக சேர்ந்து, போலி அரசு முத்திரைகளைப் பயன்படுத்தி அரசு ஆவணங்களை போலியாக தயாரிப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த ஜெராக்ஸ் கடை மற்றும் வீட்டில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் பத்திரப்பதிவிற்கு பயன்படுத்தப்படும் போலி பத்திர நகல் , போலி அரசு முத்திரைகள் , போலி அரசு ஆவணங்கள் மற்றும் நிலம் சம்மந்தமான போலி ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டது .
இச்சம்பவம் தொடர்பாக கூடுவாஞ்சேரி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, நந்தினி அவரது கணவர் பாலாஜி உள்பட 4 பேரை கைது செய்தனர். மேலும் போலி ஆவணங்கள் தயாரிக்க உடந்தையாக இருந்த நபர்களிடம், போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர் .