மிளகாய்பொடி வீசி கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
அரியலூர் மாவட்டத்தில் மிளகாய்பொடி வீசி கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம் இரும்புலிக்குறிச்சி, செந்துறை , அதனை சுற்றியுள்ள பகுதியில் மிளகாய் பொடி வீசி இருசக்கர வாகன ஓட்டிகளிடமிருந்து, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த செந்துறை பூமுடையான் குடிகாடு மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சொக்கு என்கிற ராஜேஷ் (27), பூமுடையான் குடிகாடு அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சின்னு என்கிற ராஜேஷ் (24) ஆகிய இருவரையும் கடந்த ஜனவரி மாதம் அரியலூர் மாவட்ட தனிப் படை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் சின்னு என்கிற ராஜேஷ் மீது வீட்டினுள் புகுந்து கொள்ளையடித்த வழக்கு உள்ளது.
இந்நிலையில் குற்றவாளிகள் இருவரும் வெளியே வந்தால் மேலும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடக்கூடும் மற்றும் மக்களின் உயிர் மற்றும் உடமைகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற காரணத்தினால் அவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உடையார்பாளையம் காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன், ஜெயங்கொண்டம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கலைகதிரவன் பரிந்துரை செய்தனர்.
அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K.பெரோஸ்கான் அப்துல்லா மேற்பரிந்துரை செய்ததை ஏற்ற அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி, குற்றவாளி இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க ஆணையிட்டார்.
அதற்கான ஆணை பிரதியை அரியலூர் மாவட்ட காவல்துறையினர் திருச்சி மத்திய சிறையில் அளித்தனர்.