ராம்கோ சிமெண்ட் நிறுவனத்தின் ஆக்சிஜன் ஆலையை அமைச்சர் திறந்தார்
திராம்கோ சிமெண்ட் நிறுவனத்தின் மருத்துவ ஆக்சிஜன் ஆலை, சுகாதார வளாகத்தினை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம், கோவிந்தபுரம் தி ராம்கோ சிமெண்ட் ஆலை வளாகத்தில் மருத்துவ ஆக்சிஜன் ஆலை மற்றும் நல்லாம்பத்தை கிராமத்தில் சுகாதார வளாகத்தினை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் திறந்து வைத்து, மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி மற்றும் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா முன்னிலை வகித்தனர்.
உலகளாவிய கோவிட்-19-ன் இரண்டாவது அலையின்போது மருத்துவ பிராணவாயு ஆலை மக்களுக்கு இன்றியமையாத ஒன்றாக இருந்தது. இதனைக் கருத்தில் கொண்டு ராம்கோ நிறுவனத் தலைவர், ராம்கோ குழுமத்தின் அனைத்து சிமெண்ட் உற்பத்தி ஆலைகளிலும் மருத்துவ பிராணவாயு ஆலையினை அமைத்துத்தருவதாகத் தெரிவித்தார். அதன்படி, ராம்கோ நிறுவனத்தின் ஆர்.ஆர்.நகர் ஆலையில் அமைத்தபின்னர், தற்போது அரியலூர் மாவட்டம், கோவிந்தபுரம் சிமெண்ட் ஆலையில் மருத்துவ பிராணவாயு ஆலை அமைத்து தற்சமயம் உற்பத்திக்கு தயாராக உள்ளது. இதனை இன்றைய தினம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து அமைச்சர் கூறுகயைில் இதிலிருந்து உருவாகும் மருத்துவ பிராணவாயு அரியலூர் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளின் தேவையினை பூர்த்தி செய்ய உதவும். இந்த ஆலை மட்டுமில்லாது, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை உபயோகத்திற்கு 70 கொள்ளளவு கொண்ட மருத்துவ பிராணவாயு சேமிப்பு தொட்டியினையும் நன்கொடையாக அளித்துள்ளது. இந்த திட்டங்கள் மதிப்பீடு சுமார் ரூ.118 இலட்சமாகும்.
மேலும், அரியலூர் மாவட்டம், கோவிந்தரபும் கிராமத்திலுள்ள ராம்கோ சிமெண்ட்ஸ் ஆலையைச் சுற்றியுள்ள சில கிராமங்கள் சுத்தம் மற்றும் சுகாதாரத்தில் பின்தங்கியுள்ளது என்பதனை அதன் செயல்பாடுகள் மூலம் தெரியவந்தது. அநேக கிராமங்களில் தங்களது வீடுகளில் கழிப்பறை இல்லாமல் திறந்தவெளி கழிப்பிடமாக உபயோகித்துக் கொண்டிருந்தார்கள். இதனை சரிசெய்வதற்கு ராம்கோ சிமெண்ட் நிறுவனமானது முதல் தவணையாக ஒவ்வொரு கிராமத்திற்கும் 25 கழிப்பறை வீதம் மொத்தமாக 100 கழிப்பறைகளை கட்டித்தர முடிவு செய்தனர்.
இதற்காக அருகிலுள்ள கிராமங்களான நல்லாம்பத்தை, அமீனாபாத், எம்.புதூர் மற்றும் சின்னநாகலூர் போன்ற கிராமங்களை தேர்ந்தெடுத்துள்ளனர். கழிப்பறை கட்டுமான வேலைகளை சுமார் 30 வருடம் அனுபவம் வாய்ந்த கிராமாலயா என்னும் அரசு சாரா நிறுவனம் மூலம் ராம்கோ சிமெண்ட் நிறுவனம் செய்து வருகிறது. இவ்வகையான கழிப்பறைகளை பெற்றவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலம் பராமரிப்பு ஆலோசனைகளை வழங்கி, கண்காணிப்பதோடு மட்டுமல்லாமல், பொது சுகாதாரத்தைப்பற்றி அறிவுறுத்தவும் செய்கிறார்கள். இதற்கான திட்ட செலவு சுமார் ரூ.46 இலட்சம் ராம்கோ சிமெண்ட் நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஆக்சிஜன் ஆலை மற்றும் சுகாதார வளாகம் அமைத்து தந்த ராம்கோ நிறுவனத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
இந்நிகழ்ச்சியில், ராம்கோ நிறுவன ஆலைத்தலைவர் மதுசூதன் குல்கர்னி, மூத்த துணைத்தலைவர் (நிர்வாகம்) எஸ்.ராமராஜ், ராம்கோ நிறுவன அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.