அரசின் கல்வி திட்டங்களை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்:அமைச்சர் சிவசங்கர்
கல்வி ஒரு மனிதனுக்கு அறிவைத் தருவதுடன் வாழ்வை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்ல உதவுகிறது
HIGHLIGHTS
கல்விக்காக பல்வேறு திட்டங்களையும், இளைஞர்களுக்கு பல்வேறு வேலை வாய்ப்புகளையும் தமிழக அரசு உருவாக்கி வருகிறது. அதனை மாணவர்கள் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என அரியலூர் அரசு கலைக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.
அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் 54-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஜெ.மலர்விழி தலைமை வகித்தார். அரியலூர் எம்எல்ஏ கு.சின்னப்பா முன்னிலை வகித்தார்.மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பங்கேற்று, இளநிலைப் பிரிவில் 522 மாணவர்களுக்கும், முதுநிலைப் பிரிவில் 319 மாணவர்களுக்கும், ஆய்வியல் நிறைஞர் பிரிவில் 13 மாணவர்களுக்கும் பட்டங்களை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.
தொடர்ந்து அமைச்சர் பேசியது: அரியலூர் அரசு கலைக்கல்லூரி 1965-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட பாரம்பரியமான கல்லூரியாகும். இக்கல்லூரியில் தற்பொழுது 13 துறைகளில் இளநிலை பாடப்பிரிவுகளும், 12 துறைகளில் முதுநிலை பாடப்பிரிவுகளும், 5 துறைகளில் ஆய்வியல் நிறைஞர் பாடப்பிரிவுகளும், 9 துறைகளில் முனைவர் பட்ட ஆய்வு பாடப்பிரிவுகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இக்கல்லூரியில் 3,508 மாணவர்கள் பயின்று வருகின்றனர். கல்வி ஒரு மனிதனுக்கு அறிவைத் தருகிறது. வாழ்வை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்ல உதவுகிறது. மாணவர்கள் இலக்கை நிர்ணயித்து திட்டமிட்டு கல்வி கற்க வேண்டும். கல்வி கற்ற ஒவ்வொருவரும் தங்களது படிப்பிற்கேற்ப வேலைகளை தேட வேண்டும். படித்த அனைவருக்கும் அரசு வேலை என்பது இயலாத காரியம். அரசு வேலையை விட தனியார் துறைகளில் அதிக சம்பளத்தில் வேலைவாய்ப்பு உள்ளது.
தமிழக அரசு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.7,000 கோடியும், உயர்கல்வித்துறைக்கு ரூ.1,000 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்து புதிய கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும். தமிழக மாணவர்கள் தங்களது சிறப்பான திறமையினால் தொழில்நுட்பத்துறை மற்றும் கணிதத்துறையில் உலக அளவில் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். தமிழக அரசின் நடவடிக்கையின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு புதிய தொழிற்சாலைகள் வர உள்ளது. இதனால் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது. இதனை நம் பகுதியில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இக்கல்லூரி முதல்வரின் கோரிக்கையையேற்று நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய கலையரங்கம் அமைக்க தமிழக முதல்வர் கவனத்துக்கு எடுத்துச் செல்வேன் என்றார்.
நிகழ்ச்சியில், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள் மற்றும் அலுவலகப் பணி யாளர்கள் கலந்துகொண்டனர்.