உற்பத்தி பொருள் விற்பனை கண்காட்சி: மகளிர் குழுவினருக்கு அழைப்பு
மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் குறித்த விவரங்களை பதிவு செய்யலாம் என, மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டத்தில், உற்பத்தி பொருட்களின் விற்பனைக் கண்காட்சிகள் நடப்படவுள்ளதால், மகளிர் சுய உதவிக்குழுக்கள் தங்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் குறித்த அனைத்து விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும் என, ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அரியலூர் மாவட்டத்தில், தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களின் விற்பனைக் கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த கண்காட்சிகளில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் பகுதி அளவிலான கூட்டமைப்புகளில் உறுப்பினராக பதிவு செய்யப்பட்டுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள், உறுப்பினர்கள் உற்பத்தி செய்யும் பொருட்ள்களை விற்பனை செய்ய வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
இதற்கு, அரியலூர் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள், தங்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் குறித்த அனைத்து விவரங்களையும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 2ம் தளம் அறை எண் 215ல் செயல்படும், மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்தில் பதிவு செய்து கொள்ள கொள்ள வேண்டும். மேலும், மேற்குறிப்பிடப்பட்டுள்ள விவரப்படி பதிவு செய்யப்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களை மட்டுமே கண்காட்சிகளில் விற்பனை செய்ய அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.