செந்துறை பகுதியில் ரேஷன் அரிசி கடத்திய 2 சரக்கு வாகனங்கள் பறிமுதல்
அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் 2.3 டன் ரேஷன் அரிசி மற்றும் இரண்டு சிறிய ரக சரக்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் குடிமை பொருட்கள் கடத்தல் பதுக்கல் போன்ற குற்ற தடுப்பு நடவடிக்கைகளில் உதவி ஆய்வாளர் மணிகண்டன் தலைமையிலான காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது செந்துறை கடை வீதியில் லோடு ஏற்றி வந்த TN61/V5864 டாடா இன்ட்ரா, TN61/V5209 டாடா ஏஸ் ஆகிய மினி லோடு வாகனங்களை நிறுத்தி சோதனை செய்த போது அதில் பொதுவிநியோகத் திட்ட ரேஷன் அரிசி மாவாக அரைத்து சட்டவிரோதமாக கடத்தப்பட்டது தெரிய வந்தது.
வாகனங்களின் உரிமையாளர்களான முறையே குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான் என்பவரின் மகன் பீர்முகமது மற்றும் இலையூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் தினேஷ் ஆகியோர், பொதுவிநியோகத் திட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்கள் இடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கி, மாவாக அரைத்து கால்நடை தீவனத்திற்கு கள்ள சந்தையில் விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றது தெரியவந்தது.
முதல் வாகனத்தில் இருந்த 1500 கிலோ பொது விநியோக திட்ட உடைக்கப்பட்ட ரேஷன் அரிசி பீர் முகமது என்பவராலும், இரண்டாவதான டாட்டா ஏஸ் வாகனத்தில் இருந்த 800 கிலோ பொதுவிநியோகத் திட்ட ரேஷன் அரிசி இலையூர் மேலவெளி கிராமத்தைச் சேர்ந்த தங்கவேல் மகன் செல்வம் என்பவராலும் குடும்ப அட்டை காரர்களிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்கப்பட்டு மாவாக அரைத்து சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் விற்பதற்காக கொண்டு சென்றது தெரியவந்தது.
இந்நிலையில் கடத்தி வந்த 2300 கிலோ பொது விநியோக திட்ட உடைக்கப்பட்ட ரேஷன் அரிசியையும், கடத்திவரப்பட்ட இரண்டு வாகனங்களையும் பறிமுதல் செய்து குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை உதவி ஆய்வாளர் மணிகண்டன் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.