பள்ளி மாணவர்கள் தேசியக் கொடியை ஏந்தி உண்ணாநிலை போராட்டம்
பள்ளி நுழைவாயில் அருகே கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தை பள்ளிக்கே ஒப்படைக்க வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் போராட்டம்
HIGHLIGHTS
அரியலூர் - பள்ளி நுழைவாயில் அருகே வரம்பு மீறி கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தை, பள்ளிக்கே ஒப்படைக்க வலியுறுத்தி, கிராம பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் தேசியக் கொடியை ஏந்தி உண்ணாநிலை அறப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்டம், தாமரைக்குளம் ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளி கட்டிடம் இருந்த இடம் போதுமானதாக இல்லாததால் கிராம பொதுமக்கள் சார்பில் பள்ளிக்கு பின்னால் இருந்த சுமார் ஒரு ஏக்கர் நிலம் விலைக்கு வாங்கி அரசிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து பள்ளி கட்டடம் கட்டப்பட்டு ஏற்கெனவே பள்ளி கட்டிடம் இருந்த இடம் மாணவர்கள் விளையாடும் விளையாட்டு மைதானமாக மாற்றப்பட்டு மாணவர்கள் பயன்படுத்தி வந்தனர்.
தாமரைக்குளம் ஊராட்சி கட்டிடத்தில் போதுமான இடவசதி இல்லை எனக் கூறி மாணவி, மாணவிகள் பயன்படுத்தி வந்த விளையாட்டு மைதானத்தை ஆக்கிரமித்து பள்ளி நுழைவாயில் அருகே பல்வேறு வசதிகளுடன் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பள்ளி விளையாட்டு மைதானத்தில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை மீண்டும் பள்ளிக்கு வழங்க வலியுறுத்தி, கிராம பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் முன்பு கையில் தேசியக் கொடியை ஏந்தி உண்ணாநிலை அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.