தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர், அரியலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
HIGHLIGHTS
அரியலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கிராம ஊராட்சிகளில் பணியாற்றி வரும் மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்களுக்கு திருத்தப்பட்ட புதிய ஊதிய உயர்வு அரசாணையை விரைந்து வெளியிட வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான மாத ஊதியம் பெறும் வகையில், ஊதியத்தை நிர்ணயித்து இயக்குநரகத்தில் இருந்து தனி சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.
ஊராட்சி செயலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான, மாதாந்திர ஊதியத்தை அரசு கருவூலத்தில் வழங்கிட வேண்டும். 3 ஆண்டுகள் பணி முடிந்த ஊராட்சி செயலாளர்களுக்கு வட்டாரத்திற்குள் பணியிட மாறுதல் செய்வதுடன், அவர்களுக்கு பதிவுறு எழுத்தருக்கு உண்டான அனைத்து அரசின் சலுகைகளையும் வழங்கிட வேண்டும்.
தூய்மைப் பணியாளர்களுக்கு அரசாணைப்படி ஊதியம் நிர்ணயித்து, இயக்குநரகத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மேலும் அவர்களை காலமுறை ஊதியக்கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் என்.எம்.செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சா.சிதம்பரம், ஒன்றியச் செயலாளர் க.திருநாவுக்கரசு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத் தலைவர் பாலு (எ) வெங்கடாசலம், மாவட்டச் செயலாளர் ஜி.சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்று கோரிக்கைகள் குறித்து பேசினர்.