அரியலூர் மாவட்டத்தில் ரூ.321 லட்சத்தில் கட்டப்பட்ட கட்டிடங்கள் திறப்பு
செந்துறையில் ரூ.321.95 இலட்சம் மதிப்பீட்டில் 18 முடிவுற்ற கட்டிட பணிகளை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் திறந்து வைத்தார்.
HIGHLIGHTS
தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் கிராமங்களில் பொதுமக்களின் தேவையை அறிந்து தொடர்ந்து வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் செந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் முடிவுற்ற பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இதன்படி, செந்துறை ஊராட்சி ஒன்றியம், மணப்பத்தூர் கிராமத்தில் ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமையலறைக் கட்டிடம் மற்றும் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையக்கட்டிடம், சோழன்குடிகாடு கிராமத்தில் ரூ.20.57 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நூலகக் கட்டிடம், அயன்தத்தனூர் கிராமத்தில் ரூ.31.56 இலட்சம் மதிப்பீட்டில் அரசு மேல்நிலைப்பள்ளியில் கட்டப்பட்ட கணினி, அறிவியல் ஆய்வுக் கூடம் மற்றும் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையக் கட்டிடம், தளவாய்-கூடலூரில் ரூ.4.52 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பள்ளி சமையலறைக் கட்டிடம் ஆகிய கட்டிடங்களை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
மேலும், முதுகுளம் கிராமத்தில் ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நூல்நிலையக் கட்டிடம், ஆலத்தியூரில் ரூ.4 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ஊராட்சி மன்ற அலுவலக் கட்டிடம் அடிக்கல் நாட்டுதல், மணக்குடையான் கிராமத்தில் ரூ.40 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மகப்பேறு கட்டிடம், அசாவீரன்குடிகாடு கிராமத்தில் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலைக்கட்டிடம், பெரியாக்குறிச்சி கிராமத்தில் ரூ.9.30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டிடம், மருவத்தூர் கிராமத்தில் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையக்கட்டிடம், பொன்பரப்பியில் ரூ.40 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரசு மகப்பேறு கட்டிடம், ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரசு செவிலியர் குடியிருப்புக் கட்டிடம், ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலைக்கட்டிடம் மற்றும் பொன்பரப்பியில் ரூ.17 இலட்சம் மதிப்பீட்டில் குறுவட்ட நிலஅளவையர் குடியிருப்புடன் கூடிய அலுவலகக் கட்டிடம் என ஆகமொத்தம் ரூ.321.95 இலட்சம் மதிப்பீட்டில் 18 முடிவுற்ற கட்டிடங்களை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்களின் தேவை அறிந்து, தமிழக அரசின் சார்பில் தொடர்ந்து இதுபோன்ற வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்கள் பொதுமக்களின் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, தமிழக அரசின் இதுபோன்ற வளர்ச்சித் திட்டங்களை பொதுமக்கள் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சு.சுந்தர்ராஜன், ஊராட்சி ஒன்றியத்தலைவர் தேன்மொழி சாமிதுரை, உடையார்பாளைமயம் கோட்டாட்சியர் ச.பரிமளம், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.கீதாராணி, வட்டார மருத்துவ அலுவலர் மரு.ரேவதி, வட்டாட்சியர் குமரையா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெ.அமிர்தலிங்கம், திரு.சந்தானம் மற்றும் ஊராட்சி மன்றத்தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.