தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற விண்ணப்பிக்க அறிவிப்பு
அரியலூர் மாவட்டத்தில் பட்டாசு சில்லறை வணிகம் செய்ய தற்காலிக உரிமம் கோரி விண்ணப்பிக்க மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில், அரியலூர் மாவட்டத்தில் 2022 ஆம் ஆண்டு 24.10.2022 அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, வெடிபொருள் விதிகள் 2008-ன் கீழ் தற்காலிக பட்டாசு சில்லறை வணிகம் செய்ய, இருப்பு வைத்துக்கொள்ள தற்காலிக உரிமம் கோரும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேற்படி உரிமத்தினை பெறுவதற்கு தங்களது விண்ணப்பத்தினை 01.09.2022 முதல் 30.09.2022 வரை இ-சேவை மையங்களில் இணையதளம் மூலமாக கீழ்கண்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தற்காலிகமாக பட்டாசு விற்பனை உரிமம் கோரும் புலம் 9 ச.மீ முதல் 25 ச.மீ. வரை உள்ளடக்கியதாகவும், புலத்தினை குறிக்கும் புலவரைபடத்தில் சாலை வசதி, சுற்றுப்புறத்தன்மை மற்றும் கடையின் கொள்ளளவு ஆகியவற்றினை தெளிவாக குறிப்பிட்டுகாட்டும் (Sub rule - 3) புலவரைபடம். உரிமம் கோரும் இடத்தின் உரிமையாளர் மனுதாரராக இருப்பின், அதற்கான ஆவணங்கள் மற்றும் நடப்புநிதி ஆண்டில் வீட்டுவரி செலுத்திய இரசீது நகல். வாடகை கட்டிடம் எனில், உரிமையாளர் வீட்டுவரி செலுத்திய அசல் இரசீது நகலுடன், கட்டிட உரிமையாளரிடம் ரூ.20/-க்கான முத்திரைத்தாளில் பெறப்பட்ட அசல் சம்மதக் கடிதம். உரிமத்திற்கான கட்டணம் ரூ.500/- அரசு கணக்கில் செலுத்தியமைக்கான அசல் சலான். மனுதாரரின் மார்பளவு பாஸ்போர்ட் அளவுள்ள வண்ணபுகைப்படம், இருப்பிடத்திற்கான ஆதாரம் (ஆதார் கார்டு, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை).
மேற்கூறிய வழிமுறைகளை கடைபிடித்து விண்ணப்பம் செய்யுமாறும், குறிப்பிட்ட காலக்கெடுவிற்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்களும், வெடிபொருள்; விதிகள் 2008-ன் நிபந்தனைகளை கடைபிடிக்காத விண்ணப்பங்களும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது எனவும், உரிமம் இன்றி பட்டாசு விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.