அரியலூரின் அரியாசனம் யாருக்கு?
அதிமுக மற்றும் திமுகவிற்கு இடையே கடும்போட்டி நிலவுவதால் அரியலூரின் அரியாசனத்தில் யார் அமரப்போகிறார் என்பது இன்று தெரியும்.
HIGHLIGHTS
அரியலூரின் அரியாசனம் யாருக்கு?
அரியலூர் சட்டமன்ற தொகுதியில் 131621 ஆண் வாக்காளர்களும், 133087 பெண் வாக்காளர்களும் 7 இதர வாக்களர்கள் என மொத்தம் 264715 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 108942 ஆண் வாக்காளர்களும், 114858 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 223800 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். 84,54 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
அதிமுக வேட்பாளர் அரசுகொறடா தாமரை.ராஜேந்திரன், திமுக வேட்பாளர் சின்னப்பா, இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜவகர் , அமமுக வேட்பாளர் மணிவேல், நாம்தமிழர் கட்சி வேட்பாளர் சுகுணாகுமார், பகுஜன் சமாஜ் பர்டி வேட்பாளர் சவரிநன்தம், தமிழ்நாடு நல்லாட்சி கூட்டமைப்பு வேட்பாளர் தங்கசண்முகசுந்தரம் ஆகிய பிரதான கட்சி வேட்பாளர்களும், ஆறு சுயேட்சை வேட்பாளர்களும் சேர்த்து 13பேர் அரியலூர் சட்டமன்ற தொகுதியில் களம் காண்கின்றனர்.
கீழப்பழுர், அரசு தொழில்நுட்ப கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. அரியலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 376 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான வாக்குகள் 14 மேசைகளில் வைத்து 27 சுற்றுகளில் எண்ணப்பட உள்ளன. வாக்கு எண்ணிக்கையின்போது ஒரு மேசைக்கு ஒரு நுண்பார்வையாளர், ஒரு கண்காணிப்பாளர், ஒரு வாக்கு எண்ணும் உதவியாளர் மற்றும் ஒரு அலுவலக உதவியாளர் ஆகியோர் கொண்ட குழு பணியில் ஈடுபட உள்ளனர். இதில் அரியலூர் தொகுதிக்கு 20 சதவீத இருப்புடன் தலா 17 கண்காணப்பாளர்கள், 17 உதவியாளர்கள் மற்றும் 17 அலுவலக உதவியாளர்கள் என மொத்தம் 102 அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தபால் வாக்குகள் 4 மேசைகளில் எண்ணப்பட உள்ளன. ஒரு மேசைக்கு கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், ஒரு கண்காணிப்பாளர், இரண்டு உதவியாளர்கள் ஆகியோர் கொண்ட குழு பணியில் ஈடுபட்டுள்ளனர். அரியலூர் சட்டமன்ற தொகுதிக்கு தலா 4 கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 4 கண்காணிப்பாளர்கள் 8 உதவியாளர்கள் என மொத்தம் 32 அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ளனர். இராணுவ பணியாளர்களுக்கான தபால் வாக்குகள் ஒரு மேசைக்கு கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மேற்பார்வையாளர், 2 உதவியாளர்கள் கொண்ட குழு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன்படி அரியலூர் சட்டமன்ற தொகுதிக்கு 1 மேசை அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் பணியை கண்காணிப்பதற்காக ஒரு மேசைக்கு ஒரு நுண்பார்வையாளர் வீதம் அரியலூர் சட்டமன்ற தொகுதிக்கு 20 சதவீத இருப்புடன் 26 நுண்பார்வையாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபட உள்ள அனைத்து அலுவலர்கள், வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் ஊடகத்தினர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்ற சான்று சமர்ப்பித்த நபர்கள் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். வேட்பாளர்களின் முகவர்களுக்கு முக கவசம், பி.பி.இ கிட் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையம் முழுவதும் கிரிமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கை முடிவுகள் ஒவ்வொரு சுற்று முடியும் பொழுதும் முடிவுகளை தெரிவிப்பதற்காக எல்.இ.டி டிவி மற்றும் ஒலி பெருக்கி வசதி செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் நிகழ்வுகளை கண்காணிப்பதற்காக மாவட்ட கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் 400 காவல்துறையினர், 72 மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தபால் வாக்குகள் வைக்கப்பட்டுள்ள காப்பறை காலை 7மணிக்கும், மின்னனு வாக்குப்பதிவு வைக்கப்பட்டுள்ள காப்பறை காலை 7.15மணிக்கும் தேர்தல் பார்வையாளர் மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டது. இதனையடுத்து சரியாக எட்டுமணிக்கு மின்னனு வாக்குப்பதிவுகள் அனைத்தும் தலா 14மேஜைகளில் எண்ணப்படுகின்றன. தபால் வாக்குகள் அரியலூர் சட்டமன்றத்திற்கு 5மேஜைகளிலும், ஜெயங்கொண்டம் சட்டமன்றத்திற்கு எட்டு மேஜைகளிலும் எண்ணப்படுகின்றன. தபால் வாக்குகள் ஒவ்வொரு மேஜையிலும் ஒரு சுற்றில் 300வாக்குகள் வீதம் எண்ணப்படுகின்றன.
இந்நிலையில் அரியலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக மற்றும் திமுகவிற்கு இடையே கடும் போட்டி நிலவுவதால் அரியலூரின் எல்எல்ஏ என்ற அரியாசனத்தில் யார் அமரப்போகிறார் என்பது இன்று தெரியும் என்பதால் பரபரப்பு நிலவுகிறது.