அரியலூர் கலெக்டர் அலுவலகம் முன் குடும்பத்துடன் தர்ணா போராட்டம்
பறிக்கப்பட்ட பணியை மீண்டும் வழங்கக் கோரி அரியலூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குடும்பத்துடன் இளைஞர் தர்ணா போராட்டம் நடத்தினார்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம் செந்துறை முதுகுளம் பகுதியைச் சேர்ந்தவர் அருள்(41). கடந்த 2011 ஆம் ஆண்டு இவர், ஆண்டிமடம் ஒன்றியத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் தற்காலிக கணினி ஆபரேட்டர் வேலைக்கு சேர்ந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்த அவரை, கடந்தாண்டு நவம்பர் மாதம் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பணி நீக்கம் செய்துள்ளது.
இது குறித்து பலமுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காததால் விரக்தியில் இருந்த அருள் தனது மனைவி, மகள் ஆகியோரை அழைத்துக் கொண்டு அலுவலகத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த மக்கள் குறைதீர் கூட்டத்துக்கு வந்தார்.
அங்கு அவர், தான் கொண்டு வந்த மண்ணெண்ணெயை எடுத்து உடலில் ஊற்ற முயன்றார். இதை கவனித்த காவல் துறையினர் தடுத்து, மண்ணெண்ணெண்ணை கேனை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர் தர்ணாவில் ஈடுபட்டார்.
தகவலறிந்து வந்த காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜன் ஆட்சியரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து அவர் எழுந்து சென்றார். இதனால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.