திருமானூர் அருகே தொடர்மழையால் சுவர் இடிந்து விழுந்ததில் 5 பேர் காயம்
அரியலூர் மாவட்டம் மேலராமநல்லூர் கிராமத்தில் மழையின் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 5பேர் காயமடைந்தனர்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே கொள்ளிடத்தின் நடுவில் அமைந்துள்ளது மேலராமநல்லூர் கிராமம். இந்த கிராமத்தில் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த கனகராஜ்(55) என்பவரது பழைய வீட்டின் ஓடுகள் அனைத்தும் அகற்றப்பட்டு சுவர்கள் மட்டும் உள்ளது. இ்ந்நிலையில், கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக நேற்று அதிகாலை கனகராஜின் வீட்டு சுவரின் ஒரு பகுதி இடிந்து, அருகே கூரைவீட்டில் வசித்து வரும் சுகுமாறன் வீட்டின் மீது விழுந்துள்ளது.
இதில், கூரைவீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சுகுமாறன் மனைவி நாகலெட்சுமி(35), மகள்கள் பூஞ்சோலை(14), வைஷ்ணவி(12), மற்றும் நாகலட்சுமி தங்கை தஞ்சை மாவட்டம் பள்ளியக்ரஹாரம் முத்துலெட்சுமி(31), அவரது மகள் நிவேத்தியா(6) ஆகியோர் லேசான காயமடைந்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகே வசிப்பவர்கள் அவர்களை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வருவாய்த்துறை மற்றும் தூத்தூர் போலீசார் விசாரணை நடத்தினர்.