திருமானூரில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கொரோனா கால வருவாய் குறைந்த மக்களுக்கு குடும்பத்திற்கு ஆறுமாதத்திற்கு மாதம்தலா ரூ.7500 வீதம் நிவாரணம் வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை.
HIGHLIGHTS
பல மடங்கு கலால் வரிகளை போட்டு பெட்ரோல், டீசல் விலைகளை கட்டுக்கடங்காமல் உயர்த்தி வருவதைக் கண்டித்து இடதுசாரி கட்சிகளும் விடுதலை சிறுத்தை கட்சிகளும் சேர்ந்து தமிழகம் முழுவதும் ஜூன் 28 29 30 மூன்று நாட்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்திட திட்டமிட்டு நடைபெற்று வருகிறது. அதனையொட்டி இன்று அரியலூர் மாவட்டம், திருமானூர் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருமானூர் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சாமிதுரை மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய நிர்வாகி கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டம் நிறைவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அரியலூர் மாவட்ட துணை செயலாளர் டி. தண்டபாணி கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் பல மடங்கு விதிக்கப்படும் கலால் வரியை குறைத்து பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். கொரோனா கால வருவாய் குறைந்த மக்களுக்கு குடும்பத்திற்கு ஆறு மாதத்திற்கு மாதம் தலா ரூபாய் 7500 வீதம் நிவாரணம் மற்றும் நபருக்கு 10 கிலோ உணவு தானியங்கள் பொருட்கள் வழங்கிட வேண்டும். பதுக்கலை தடுத்து அனைவருக்கும் தங்குதடையின்றி தடுப்பூசி கிடைக்கச் செய்திட வேண்டும். செங்கல்பட்டு இந்துஸ்தான் பயோடெக் மருந்து உற்பத்தி நிறுவனத்தில் தடுப்பூசி உற்பத்தி செய்வதற்கு தமிழக அரசுக்கு மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தை கட்சியினர் கலந்துகொண்டனர்.