"அடுத்த சட்டமன்ற தேர்தலில் போட்டியா?" கிருத்திகா உதயநிதி பதில்
"அடுத்த சட்டமன்ற தேர்தலில் போட்டியா?" என்ற கேள்விக்கு கிருத்திகா உதயநிதி பதில் அளித்துள்ளார்.
HIGHLIGHTS
தமிழக அரசியலில் இளையதலைமுறை தலைவர்களில் முக்கியமானவர் உதயநிதி ஸ்டாலின். முதல்வர் ஸ்டாலின் மகனான இவர், தி.மு.க.வின் அடுத்த வாரிசாக கருதப்படுகிறார். மறைந்த கருணாநிதியின் பேரனான உதயநிதி ஸ்டாலினுக்கு இயற்கையாகவே அரசியல் ஆர்வம் இருப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. தமிழகம் முழுவதும் சுற்றி வந்து கட்சி பணியாற்றி வருகிறார். தற்போது சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். அவருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று தி.மு.க. தொண்டர்கள் கட்சி தலைமையிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா உதயநிதி. கிருத்திகா சென்னையில் பிறந்தவர். சென்னையில் உள்ள கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன், மாஸ் கம்யூனிகேஷன் படித்துள்ளார். படிக்கும் போதே குறும்படம் இயக்கி உள்ளார். விளம்பரப் படத்துறையிலும்,பத்திரிகை துறையிலும் வேலை பார்த்துள்ளார். இந்த துறையில் புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்று மிகுந்த ஆர்வம் கொண்டவர். அதனால் சினிமா இயக்குநராக முடிவு செய்தார். இவருடைய விருப்பத்திற்கு கணவர் உதயநிதி ஸ்டாலின் எந்த தடையும் விதித்தது இல்லை. கிருத்திகாவை உற்சாகப்படுத்தி அவர் முயற்சிக்கு தேவையான உதவிகளை தான் அவர் செய்து கொடுத்துள்ளார்.
கிருத்திகா உதயநிதி எந்த இயக்குநரிடமும் உதவி இயக்குநராக வேலை பார்த்தது இல்லை. மீடியா துறையில் வேலை பாா்த்த அனுபவத்திலேயே சினிமா படத்தை இயக்கினார். வணக்கம் சென்னை, காளி ஆகிய திரைப்படங்களை இயக்கி உள்ளார். கிருத்திகா உதயநிதி அடுத்ததாக ஓடிடி தளத்திற்கு ஒரு திரைப்படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார்.
சினிமா ஒரு பக்கம் இருந்தாலும் பல்வேறு பொது நிகழ்ச்சிகளிலும் கிருத்திகா உதயநிதி தொடர்ந்து கலந்து கொண்டுவருகிறார். சினிமா நிகழ்ச்சிகள் மட்டும் அல்லாமல் சமூக சேவை அமைப்புகள், பொதுமக்கள் நடத்தும் நிகழ்ச்சிகள் பலவற்றில் கிருத்திகா உதயநிதி ஆர்வமுடன் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை யொட்டி சென்னையில் ஒரு அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடினார் கிருத்திகா உதயநிதி.
அப்போது அவரிடம் நிருபர்கள் பல்வேறு கேள்விகள் கேட்டனர். ஒரு நிருபர், "நீங்கள் அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவீர்களா?" என்று கேட்டார்.
அதற்கு கிருத்திகா உதயநிதி சிரித்துக்கொண்டே, "இதைப்பற்றியெல்லாம் நான் யோசித்தது கூட கிடையாது. இப்படியெல்லாம் கேட்டால் என்னிடம் பதில் இல்லை" என்றும் கூறினார். கிருத்திகா உதயநிதி முற்போக்கு சிந்தனை கொண்டவர். குடும்ப தலைவியாக இருந்து சினிமா படம் இயக்க வந்துள்ளார். அவர் கணவர் உதயநிதி ஸ்டாலினும் முதலில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லாமல் தான் இருந்தார். இப்போது தீவிர அரசியல்வாதி ஆகிவிட்டார். மிகப்பெரிய அரசியல் குடும்பத்தை சேர்ந்த கிருத்திகா உதயநிதியும் எதிர்காலத்தில் அரசியல்வாதியாக மாற வாய்ப்பு உள்ளது என்பது அரசியல் நிபுணர்களின் கணிப்பாக உள்ளது.