"ஆறுமுகசாமி ஆணைய குற்றச்சாட்டை சட்டப்படி சந்திப்பேன்": விஜயபாஸ்கர் பேட்டி
"ஆறுமுகசாமி ஆணைய குற்றச்சாட்டை சட்டப்படி சந்திப்பேன்" என்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
HIGHLIGHTS
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் கருத்து தெரிவித்தனர். இதைத்தொடா்ந்து ஜெயலலிதா மரணம் பற்றி விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் விசாரணை நடத்தி இறுதி அறிக்கையை கடந்த ஆகஸ்டு 27-ந் தேதியன்று அரசிடம், நீதிபதி சமர்ப்பித்தார். பின்னர் அந்த இறுதி அறிக்கை கடந்த வாரம் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த விசாரணை அறிக்கையில் நீதிபதி ஆறுமுகசாமி பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளார். உடல்நலக் குறைவு ஏற்பட்டபோது ஜெயலலிதாவை 22.9.2016 அன்று அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு உடனே அழைத்துச் சென்றதில், சசிகலா உள்ளிட்ட அவரது வீட்டில் இருந்தவர்களின் செயல்பாட்டில், இயற்கைக்கு முரணான செயல்பாட்டை ஆணையம் காணவில்லை. ஆனால் அதன் பிறகு நடந்த சம்பவங்களை காணும்போது, சசிகலா, டாக்டர் சிவகுமார், அப்போதைய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய சுகாதார;த்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது தவறு காணப்படுவதால் அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் தீர்மானித்துள்ளதாக கூறியிருந்தது.
மேலும் ஆணையத்தின் பரிந்துரையின்படி, அதில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதற்காக சட்ட நிபுணர்களின் கருத்தை பெற்று பரிசீலிக்கப்படும் என்றும் ஆணையத்தின் அறிக்கை, மக்கள் நல்வாழ்வுத்துறையின் முதன்மைச் செயலாளருக்கு அளிக்கப்பட்டு, அதில் நடவடிக்கை எடுப்பதற்கான முன்னெடுப்புகளை துறை மேற்கொண்டு வருகிறது என்றும் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு அறிக்கையில் கூறியிருந்தார்.
இந்நிலையில் புதுக்கோட்டைக்கு வந்திருந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் நிருபர்கள் இது குறித்து கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:- எங்களை எல்லாம் ஆளாக்கியவர் ஜெயலலிதா. அவர் எங்களுக்கு தெய்வம் போன்றவர். நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் இறுதி அறிக்கையில் என்னை பற்றி கூறியுள்ள கருத்துக்கள் அனைத்தும் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை. அரசியல் உள்நோக்கம் கொண்டது. ஜெயலலிதா உடல்நலம் பெற்று நல்லநிலையில் குணமாகி மீண்டு வர வேண்டும் என்று போராடிய லட்சோப லட்சம் தொண்டர்களில் நானும் ஒருவன். அப்போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த நான் என்னுடைய கடமையை மனசாட்சியோடு செய்துள்ளேன். நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் சொல்லாததை சொன்னது போலவும், சொன்னதை சொல்லாதது போலவும் கருத்துக்கள் திரித்து கூறப்பட்டுள்ளன. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன என்ற இந்திய அளவில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. பொது வாழ்க்கையில் உள்ள நாங்கள் சட்ட நிபுணர்களோடு இது பற்றி கலந்து பேசி, சட்ட ரீதியாக இந்த பிரச்னையை எதிர்கொள்வோம்.இவ்வாறு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். .