/* */

‘தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையே தொடரும்’- அண்ணாமலைக்கு தமிழக அரசு பதில்

‘தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையே தொடரும்’- என அண்ணாமலைக்கு தமிழக அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

‘தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையே தொடரும்’- அண்ணாமலைக்கு தமிழக அரசு பதில்
X

தேசியக் கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் இருமொழிக்கொள்கையை தமிழகத்தில் தொடரும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

செயற்கை நுண்ணறிவு குறித்த பாடத்திட்டம், தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதுதொடர்பான செய்தியை தமிழக முதல்வர் ஸ்டாலின், சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். கணினிக் கல்வியைப் பயிற்றுவித்ததில் முன்னோடி மாநிலமாக விளங்கியதைபோல் AI தொழில்நுட்பத்தையும் முதல் மாநிலமாகப் பயிற்றுவிக்கிறோம் எனத் தெரிவித்திருந்தார்.

இதைக் குறிப்பிட்டு பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை, செயற்கை நுண்ணறிவு (AI) பாடத்திட்டத்தை வரும் கல்வி ஆண்டு முதல் அறிமுகப்படுத்த இருப்பதாக உத்தரப் பிரதேச மாநில அரசு கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவித்திருந்த நிலையில், தமிழக அரசும் தற்போது பள்ளிப் பாடத்திட்டத்தை மேம்படுத்த முயற்சிகளை மேற்கொள்வது பாராட்டுக்குரியது எனத் தெரிவித்தார்.

மேலும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கையை படிப்படியாக தமிழகத்தில் செயல்படுத்திக் கொண்டிருக்கும் தமிழக அரசு, தாய்மொழியை அடிப்படையாகக் கொண்ட மும்மொழி கல்விக் கொள்கையையும் விரைவில் தமிழகத்தில் கொண்டு வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது எனத் தெரிவித்திருந்தார் அண்ணாமலை.

இந்நிலையில், அண்ணாமலையின் கருத்துக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பம் சார்ந்து தமிழ்நாட்டுக்கு யாரும் வகுப்பெடுக்கத் தேவையில்லை. பெரியார் காட்டிய முற்போக்கு வழியில் செல்லும் அரசாக தமிழ்நாடு அரசு செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பள்ளி மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பற்றிய அறிவை ஊட்டுவதற்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டது தமிழ்நாடு அரசு. அதன்படி ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் செயற்கை நுண்ணறிவில் பயிற்சியளிப்பதற்காக மைக்ரோசாஃப்ட் டீல்ஸ் திட்டம் என்னும் ஒரு திட்டத்தை நாட்டிலேயே முதன்முறையாகக் கொண்டு வந்திருக்கிறது.

இது குறித்து பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறுகையில் இது தேசிய கல்விக் கொள்கையில் சொல்லப்பட்ட திட்டம் என்று தெரிவித்திருந்தார். மேலும் வெகு விரைவில் முன்மொழிக் கொள்கையையும் தமிழ்நாடு அரசு கொண்டுவரும் என்றும் குறிப்பிட்டிருந்தார். அண்ணாமலை வரலாற்றை மாற்றவோ திரிக்கவோ முயலக்கூடாது. தமிழ்நாடு அரசு அவரது கூற்றை முற்றிலும் நிராகரிக்கிறது. தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழ்நாட்டுக்கென்று வரலாறும் பாரம்பரியமும் உண்டு.

1920 ஜூலை 16ஆம் தேதி அன்றைய கிண்டி பொறியியல் கல்லூரியில் (இன்றைய அண்ணா பல்கலைக்கழகம்) நடந்த தமிழ் மன்ற விழாவில் தந்தை பெரியார் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். அங்கு சென்ற தந்தை பெரியாரிடம் கல்லூரிக்கு என புதிய கம்ப்யூட்டரை வாங்கி இருப்பதாக அங்கு இருக்கும் பேராசிரியர்கள் தெரிவிக்க அதைப் பார்க்க வேண்டும் என்று விரும்பிக் கேட்டார். பெரியார் படியேறிச்செல்ல முடியாத முதுமையில் இருந்தாலும், முதல் மாடிக்கு தன்னை தூக்கிச் செல்லுமாறு வேண்டி, அங்கு சென்று அந்த கம்ப்யூட்டரைப் பார்த்தார். அப்போது அதற்கு கணினி என்கிற பெயர் வைக்கப்படவில்லை. ஐ.பி.எம் கம்ப்யூட்டர் 1620 மாடல் கணினி அது.

எந்த தேதியைச் சொன்னாலும் அதன் கிழமையை மிகச் சரியாக அக்கணினி சொல்லி விடும் என்கிற செய்தியை அங்குள்ள பேராசிரியர்கள் சொல்ல பெரியார் சில தேதிகளை சொல்லி, கிழமை சரியாக வருகிறதா என்று பார்த்தார். தன்னுடைய பிறந்த நாளையும் அவர் சொல்ல சரியாக சனிக்கிழமை என்று கூறியது அந்தக் கணினி. அவரிடம் இந்த கணினி பற்றி கூறியது அன்றைய பேராசிரியரும் பின்னாளில் துணைவேந்தரும் ஆன வா.செ குழந்தைசாமி. வருங்காலத்தில் ஒவ்வொருவரின் சட்டைப் பையிலும் ஒரு தகவல் தொடர்பு கருவி இருக்கும் என்று இன்றைய செல்போன் குறித்து அன்றே கணித்து சொன்னவர் பெரியார்.

இதன் தொடர்ச்சியாக 1997 லேயே அன்றைய முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி தொலைநோக்குப் பார்வையோடு சிந்தித்து தமிழ்நாட்டுக்கென தனியே தகவல் தொழில்நுட்பத்துறைக்கான கொள்கை ஒன்றை உருவாக்கி, தனியாக ஒரு துறையை உருவாக்கி அதற்கென ஒரு அமைச்சரை நியமித்தார். தகவல் தொழில்நுட்பத் துறை பற்றி நாட்டின் பிற மாநிலங்கள் இது குறித்து பெரிதும் விழிப்புணர்வு அடையாத காலகட்டத்திலேயே தொலைநோக்குப் பார்வையோடு கருணாநிதி சிந்தித்து இதற்கான திட்டங்களைத் திட்டினார். டைடல் பார்க் போன்ற கட்டமைப்புகளை மாநிலத்தில் உருவாக்கி உலக நிறுவனங்களின் முதலீட்டு மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றிக் காட்டினார். இதன் மூலம் சென்னை ஒரு ஐ.டி ஹப் ஆக மாறியது.

இன்றைக்கு பழைய மகாபலிபுரம் சாலை முழுவதும் காணப்படும் ஐ.டி நிறுவனங்கள் அனைத்திற்கும் அன்றே வித்திட்டது அன்று கருணாநிதி உருவாக்கிய தனி கொள்கைதான். இதையடுத்து அரசுத் துறைகளை கணினிமயமாக்கியது கருணாநிதி செய்த தகவல் தொழில்நுட்பப் புரட்சி. E-governance எனப்படும் மின் நிர்வாக முறையை முதன்முதலில் திருவாரூர் மாவட்டத்தில் அறிமுகப்படுத்தினார். அதன் தொடர்ச்சியாகவே குக்கிராமங்கள் தொடங்கி தலைநகரம் வரை படிப்படியாக ஒவ்வொரு துறையும் கணினி மயமாகி ஊழியர்களின் பணிச்சுமையை குறைத்தது. தகவல் சேமிப்பும் எளிதாகி இருக்கிறது. இந்த தொடர் ஓட்டத்தின் தொடர்ச்சியாக செயற்கை நுண்ணறிவுக்கென தனியே ஒரு கொள்கை தமிழ்நாட்டில் 2020ல் உருவாக்கப்பட்டது.

தேசிய கல்விக் கொள்கை என்கிற ஒன்று உருவாக்கப்படுவதற்கு முன்பாகவே இவையெல்லாம் நடந்தன. தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. எனினும் அதில் மாநிலங்கள் அடைய வேண்டிய இலக்குகள் என்று சொல்லப்பட்டிருக்கும் பலவற்றை தமிழ்நாடு ஏற்கனவே அடைந்துவிட்டது. எடுத்துக்காட்டாக தேசிய அளவில் மாணவர் சேர்க்கை விகிதத்தை 50 % ஆக ஆக்க வேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கை கூறுகிறது. ஆனால் அகில இந்திய மேல்நிலைக் கல்வி ஆய்வறிக்கையின் படி (All India Survey of Higher Education (AISHE) தமிழ்நாட்டின் மாணவர் சேர்க்கை விகிதம் 51.4 சதிவிகிதத்தை 2019-20 கல்வியாண்டிலேயே எட்டிவிட்டது.

2035 ஆம் ஆண்டுக்குள் 50 சதவிகிதத்தை எட்ட வேண்டும் என இலக்கு நிர்ணயித்திருக்கிறது தேசிய கல்விக் கொள்கை. ஆனால் தமிழ்நாடு 100 சதவீதத்தையே 2035ல் எட்டிவிடும். தமிழ்நாடு அரசு செய்ததை, செய்துகொண்டிருப்பதை தேசிய கல்விக் கொள்கையில் இணைத்துவிட்டு தேசிய கல்விக் கொள்கையின்படி தமிழ்நாடு செயல்படுகிறது என்று சொல்வது நகைப்புக்குரியது. குறிப்பாக தொழில்நுட்பம் சார்ந்து தமிழ்நாட்டுக்கு யாரும் வகுப்பெடுக்கத் தேவையில்லை . நாட்டின் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு எப்பொழுதும் தொழில்நுட்பத் துறையில் குறிப்பாக தகவல் தொழில்நுட்பத்தில் ஒரு முன்னோடி மாநிலமாகவே திகழ்ந்து வருகிறது என்பதை அனைவரும் அறிவர்.

முன்னோடி மாநிலமான தமிழ்நாட்டில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங் போன்றவற்றில் வருங்காலத்தில் மிகத் தீவிரமாக பயிற்சிகள் அளிக்கப்படும். ஏனெனில் செயற்கை நுண்ணறிவை கையிலெடுக்கும் மாநிலமே இன்னும் பத்தாண்டுகளில் முன்னணி மாநிலமாக இருக்கப்போகிறது. பெரியார் காட்டிய பாதையில் தமிழ்நாடு அரசு முற்போக்குப் பாதையில் செல்லும் அரசாகவே செயல்படும். அண்ணாமலை பகல் கனவு காண்பது போல மும்மொழிக் கொள்கை ஒருபோதும் தமிழ்நாட்டில் உருவாக்க வாய்ப்பு இல்லை; இருமொழிக் கொள்கையே தொடரும்.

இவ்வாறு தமிழக அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 14 Jan 2024 2:04 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    "நினைவுகள்"மூளை கணினியின் ஞாபக மென்பொருள்..!
  2. தொழில்நுட்பம்
    வாட்ஸ்அப்பில் கடவுச்சொல் தேவையில்லை!
  3. லைஃப்ஸ்டைல்
    இதயங்கள் என்னவோ வேறு வேறுதான்..! உன்னில் நான்; என்னில் நீ..!
  4. கோவை மாநகர்
    எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் முதல்வராக வருவார் : எஸ்.பி....
  5. உலகம்
    அழகென்றால் இளமை மட்டும் இல்லை: 60 வயதில் அசத்தும் வழக்கறிஞர்
  6. சினிமா
    கருவில் கரைந்த எம்.ஜி.ஆர்., குழந்தை..!
  7. நாமக்கல்
    ப.வேலூர் அருகே வாலிபர் மர்ம மரணம்! போலீசார் தீவிர விசாரணை!
  8. லைஃப்ஸ்டைல்
    அக்காவுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  9. நாமக்கல்
    மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மைத்துனரை தாக்கிய வாலிபர் கைது..!
  10. நாமக்கல்
    ஏ.மேட்டுப்பட்டி ஸ்ரீ ராமர் கோயிலில் உழவாரப்பணிகள் துவக்க விழா..!