ஆயிரம் படங்களுக்கு உரையாடல் எழுதிய ஆரூர்தாஸ்: கலைத்துறை வித்தகர் விருது..!
Arurdas-தமிழ்த்திரையுலகின் முதுபெரும் திரைக்கதை வசனகர்த்தாவான ஆரூர்தாஸ் தமிழக அரசின் கலை வித்தகர் விருது பெறுகிறார்.
HIGHLIGHTS
Arurdas-தமிழ்த்திரையுலகில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக வசனகர்த்தாவாக வலம் வந்தவர் ஆரூர்தாஸ். தனது தனித்துவமான எழுத்தாற்றலால் திரைவசனத்தில் சாதனை படைத்தவர். எம்.ஜி.ஆர்., சிவாஜி, எஸ்.எஸ்.ஆர்., ஜெமினி உள்ளிட்ட முக்கிய கதாநாயகர்களின் பல்வேறு வெற்றிப்படங்களில் இவரது வசனம் முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது.
தனித்த திரை ஆளுமையான ஆரூர்தாஸுக்கு தமிழக அரசின் கலைத்துறை வித்தகர் விருது வழங்கப்படுவது மிகவும் பொருத்தமானது எனலாம் என்று திரையுலகத்தினர் மகிழ்வோடும் பெருமிதத்தோடும் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு 'கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது' தமிழ்நாடு அரசின் சார்பில் ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 3 அன்று வழங்கப்படும் என்று செய்தி மற்றும் விளம்பரத் துறையின் மானியக் கோரிக்கையின்போது அறிவிப்பு வெளியிடப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டது.
விருதாளரைத் தேர்ந்தெடுக்க திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் தலைமையில், நடிகர் சங்கத் தலைவர் நாசர், திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் ஆகியோர்களை உறுப்பினர்களாகக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அதன்படி, 2022-ம் ஆண்டுக்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுக்காக பல நூறு திரைப்படங்களுக்கு வசனங்கள் எழுதிய புகழ்பெற்ற வசனகர்த்தா ஆரூர்தாஸ்(வயது 90) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நடிகருக்கென்று தனி பாணி கொள்ளாமல், தன்னை முன்னிறுத்தாமல், கதாபாத்திரம் அறிந்து உணர்ந்து, வசனம் எழுதி, தான் பங்காற்றிய படங்களுக்கு செழுமை சேர்த்தவர். திருவாரூர் மாவட்டத்தில் பிறந்த ஆரூர்தாஸ், முன்னணி நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்டோர் நடித்த 1,000 திரைப்படங்களின் உரையாடலில் அழுத்தமான பங்கு வகித்தவர். தனது ஊரான திருவாரூர் பெயரையும், தன் பெயரிலான ஏசுதாஸில் உள்ள பிற்பாதியையும் இணைத்து ஆரூர்தாஸ் எனப் பெயர் வைத்துக் கொண்டார். 60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்த் திரையுலகில் நெடிய பணிபுரிந்த அனுபவம் ஒரு சாதனையாகும்.
ஆரூர்தாஸுக்கு 3.6.2022-ல் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதும், பரிசுத் தொகை ரூபாய் 10 லட்சமும் வழங்கி சிறப்பிக்கப்படவுள்ளது'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகவை முதிர்ந்த ஆரூர்தாஸ் ஏற்கெனவே, கலைமாமணி விருது மற்றும் கவிஞர் வாலி விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. படம் பார்ப்பவரின் மனத்தில் இயல்பாகவே அமர்ந்துகொள்ளும் இவரது எளிய தமிழ் நடை கொண்ட வசனங்கள் காலங்கடந்தும் போற்றுதலுக்குரியதாகத் திகழ்வது பாராட்டுக்குரியது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2