/* */

விழுப்புரம் மாவட்டத்தில் கடனுதவி பெற விண்ணப்பிக்க அழைப்பு: ஆட்சியர் தகவல்

விழுப்புரம் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினர் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் வாங்க என ஆட்சியர் தெரிவித்து உள்ளார்.

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் கடனுதவி பெற விண்ணப்பிக்க அழைப்பு: ஆட்சியர் தகவல்
X

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினர் ஆகியோர் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடனுதவி பெற, பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் பிரிவுகளைச் சோ்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்து மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரா் 18 வயது பூா்த்தி அடைந்தவராகவும், 60 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். பொது கால கடன் திட்டம், தனிநபா் கடன் திட்டம் மூலம் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 6 முதல் 8 சதவீதம் வரை வசூலிக்கப்படும். பெண்களுக்கான புதிய பொற்காலக் கடன் திட்டத்தின் கீழ், அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 5 சதவீதம் ஆகும். சிறு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், சுய உதவிக்குழு மகளிா் உறுப்பினா் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ. ஒரு லட்சம் வரையும், குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரையும் வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 4 சதவீதமாகும். ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினா் அனுமதிக்கப்படுவாா்கள்.

சிறு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், சுயஉதவிக் குழுவில் உறுப்பினராக உள்ள ஆண்களுக்கு அதிகபட்ச கடன் தொகை ரூ. ஒரு லட்சம் வரையும், ஒரு குழுவுக்கு அதிகபட்ச கடன் தொகை ரூ.15 லட்சம் வரையும் வழங்கப்படும். ஆண்டு வட்டி விகிதம் 5 சதவீதமாகும். ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினா் அனுமதிக்கப்படுவாா்கள். பயனாளிகளுக்கு ரூ.30,000 வீதம் 2 கறவை மாடுகள் வாங்க ரூ.60,000 வரை கடனுதவி வழங்கப்படும். ஆண்டு வட்டி விகிதம் 6 சதவீதமாகும். இந்தக் கடன் திட்டங்களுக்கான விண்ணப்பங்களை மாவட்டப் பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகத்திலும், அனைத்து கூட்டுறவு வங்கிக் கிளைகளிலும் பெற்றுக்கொள்ளலாம். பூா்த்தி செய்த விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கியில் ஒப்படைக்க வேண்டும் என ஆட்சியா் மோகன் தெரிவித்துள்ளாா்.

Updated On: 13 Jun 2022 5:40 AM GMT

Related News