பள்ளி விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு அமைச்சர் நேரில் ஆறுதல்
வண்ணாரப்பேட்டை மாநகராட்சி பள்ளியில் ஆபத்தாக காட்சி அளித்த கட்டிடங்கள் இடிக்கப்படுவதை அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் ஆய்வு
HIGHLIGHTS
நெல்லையில் பள்ளி சுவர் இடிந்து பலியான மூன்று மாணவர்களின் குடும்பத்தினருக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சென்று ஆறுதல் கூறினார். முன்னதாக விபத்து நடைபெற்ற சாப்டர் பள்ளியில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
நெல்லையில் கடந்த 17ஆம் தேதி டவுன் சாப்டர் பள்ளி கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் 3 மாணவர்கள் பலியானார்கள். மேலும் ஐந்து மாணவர்கள் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சாப்டர் பள்ளியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் விபத்து ஏற்பட்டது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து விபத்தில் பலியான நெல்லை பேட்டை அருகே உள்ள பழவூர் பகுதியைச் சேர்ந்த மாணவர் சுதீஷ், பேட்டை அருகே உள்ள நரசிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த மாணவர் அன்பழகன் மற்றும் நெல்லை ராமையன்பட்டி பகுதியைச் சேர்ந்த மாணவர் விஸ்வரஞ்சன் ஆகியோர் வீடுகளுக்கு அமைச்சர் நேரில் சென்று குடும்பத்தினரிடம் ஆறுதல் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து வண்ணாரப்பேட்டை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆபத்தாக காட்சி அளித்த கட்டிடங்கள் இடிக்கப்படுவதை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட மைய நூலகத்தை அமைச்சர் ஆய்வு செய்தார். தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடைபெற உள்ளது.