குலசை முத்தாரம்மன் கோவில் கொடியேற்றம்: விரதமிருந்து மாலையணிந்த பெண்கள்
குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் கொடியேற்றத்தை தொடர்ந்து, நெல்லையில் பெண்கள் விரதமிருந்து மாலை அணிவித்து கொண்டனர்.
HIGHLIGHTS
திருச்செந்தூர் அடுத்துள்ள, உலக புகழ் பெற்ற குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவிலில் தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக, கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும் பக்தர்கள் இல்லாமல், இவ்விழா நடைபெற்றது. காலை ஹோமம், சிறப்பு பூஜைகள், அபிஷேகங்களுடன் துவங்கிய கொடியேற்றம் நிகழ்ச்சி, பகல் 11.30 மணியளவில் நிறைவு பெற்றது.
ஆண்டு முழுவதும் தசரா கொடியேற்றத்தின்போது, முத்தாரம்மன் கோவிலில் பக்தர்கள், தங்கள் குடும்பத்தினருடன் சென்று மாலை அணிந்து 11 நாட்கள் விரதம் இருப்பது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக, முத்தாரம்மன் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதியில்லாததால், தங்கள் பகுதிகளில் உள்ள கோவில்கள், பக்தர்கள் விரதமிருக்கும் காளிபிறை ஆகிய இடங்களுக்கு சென்று முத்தாரம்மனை வணங்கி மாலை அணிந்து வருகின்றனர்.
நெல்லை டவுன், பாறையடி பகுதியில் உள்ள காளி சாமி என்ற கண்ணன், 25 ஆண்டுகளாக முத்தாரம்மன் கோவிலுக்கு மாலை அணிவித்து சுவாமியை வழிபாடு செய்து வருகிறார். இவரது வீட்டில் பத்திரகாளி சிலை வைத்து பூஜை செய்து வருகிறார். குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு விரதமிருந்து செல்லும் பக்தர்கள், பெண்கள் அனைவரும், இன்று காளி சாமியிடம் மாலை அணிந்து கொண்டனர்.