நெல்லை மாநகராட்சி புதிய மேயராக திமுக வேட்பாளர் சரவணன் பாேட்டியின்றி தேர்வு
நெல்லை மாநகராட்சியில் அடிப்படை பிரச்னைகளை தீர்க்க அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக புதிய மேயர் சரவணன் தெரிவித்தார்.
HIGHLIGHTS
நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தல் சுமுகமாக நடைபெற்று முடிந்தது. திமுக தலைமை அறிவித்த பி.எம்.சரவணன் மாநகராட்சியின் 6வது மேயராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அடிப்படை பிரச்னைகளை தீர்க்க அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக புதிய மேயர் பேட்டி.
நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தல் மாநகராட்சியின் ராஜாஜி மஹாலில் நடைபெற்றது. இதில் திமுக தலைமை அறிவித்த வேட்பாளரான பி.எம்.சரவணன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். நெல்லை மாநகராட்சியை பொறுத்தவரை திமுக கூட்டணி 50 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. அதிமுக நான்கு இடங்களிலும், சுயேச்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றிருந்தனர். சுயேட்சை உறுப்பினரும் திமுகவில் இணைந்ததால் நெல்லை மாநகராட்சியில் திமுகவின் பலம் 51 ஆக உயர்ந்தது. எனவே இன்று நடைபெற்ற மேயர் தேர்தலில் பி.எம்.சரவணனை எதிர்த்து வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து சரவணன் நெல்லை மாநகராட்சி மேயராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டிருப்பதாக மாநகராட்சி ஆணையர் விஷ்ணு சந்திரன் அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து அவருக்கு மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். இவர் நெல்லை மாநகராட்சியின் 16வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். மேலும் இதுவரை நெல்லை மாநகராட்சியில் ஐந்து முறை மேயர் தேர்தல் நடைபெற்றுள்ள நிலையில் ஆறாவது மேயர் என்ற பெருமையை சரவணன் பெற்றுள்ளார்.
இதுகுறித்து சரவணன் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில்:- நெல்லை மேயராக தேர்வு செய்யப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு வாக்களித்த அனைத்து மாமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நெல்லை மாநகராட்சிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் சிறப்பான முறையில் செய்து கொடுப்பேன். குறிப்பாக சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று தெரிவித்தார்.
மேயர் தேர்தலை தொடர்ந்து இன்று பிற்பகல் துணை மேயர் தேர்தல் நடைபெற உள்ளது. துணை மேயராக திமுக தலைமை ராஜு என்பவரை அறிவித்துள்ளது. இவர் நெல்லை மாநகராட்சியில் 1-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இதற்கிடையில் மேயர் தேர்தல் முடிந்த பிறகும் திமுக கவுன்சிலர்கள் வழக்கம் போல் இன்றும் டெம்போ வேன்களில் அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது தலைமை அறிவிக்கும் வேட்பாளர்களுக்கு எதிராக வாக்களித்து விடக் கூடாது என்ற அச்சத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்த கையோடு திமுகவைச் சேர்ந்த 38 கவுன்சிலர்கள் மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் ஏற்பாட்டில் இன்பச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.
பின்னர் கடந்த 2ஆம் தேதி நடைபெற்ற பதவியேற்பு விழாவின் போது அனைவரும் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டு பதவி ஏற்பு விழா முடிந்த கையோடு மீண்டும் மனித சங்கிலி பாதுகாப்போடு அழைத்துச் செல்லப்பட்டனர். தொடர்ந்து இன்றும் அவர்கள் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டு மேயர் தேர்தலில் வாக்களித்த கையோடு மீண்டும் வேன்களில் அழைத்து சென்று நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பிற்பகல் நடைபெறும் துணை மேயர் தேர்தலில் வாக்களிக்க அனைவரும் அழைத்து வரப்பட உள்ளனர்.