நெல்லை மாநகராட்சிக்கு வரி செலுத்தாத வீடுகளில் குடிநீர் துண்டிப்பு
நெல்லை மாநகராட்சிக்கு நெடுங்காலமாக வரி செலுத்தாத 4 வீடுகளில் குடிநீர் இணைப்பை துண்டிக்க மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
HIGHLIGHTS
திருநெல்வேலி மாநகராட்சி வார்டு 33, 41, 51, ஆகிய பகுதிகளில் சொத்துவரி, குடிநீர் கட்டணம் மற்றும் இதர கட்டணங்கள் நெடுங்காலமாக செலுத்தாத வரி விதிப்புதாரர்களின் 4 குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு செய்து மாநகராட்சி ஆணையாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
கடந்த 2021-22-ஆம் ஆண்டிற்கான வரிவசூல் வரும் 31.03.2022-ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் உள்ளது. எனவே பொதுமக்கள் மாநகராட்சிக்கு செலுத்தவேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம் தொழில்வரி, அச்சம் மற்றும் அருவருக்கதக்க இனங்களுக்கான உரிமக்கட்டணம், பாதாள சாக்கடை பராமரிப்பு கட்டணம் மற்றும் மாநகராட்சி கடை வாடகை ஆகிய வரி மற்றும் வரியில்லா இனங்களை உடனடியாக மாநகராட்சிக்கு செலுத்த கேட்டுக்கொள்ளப்பட்டது.
மேலும் சொத்துவரி, குடிநீர் கட்டணம் அதிக அளவில் நிலுவை வைத்து நெடுங்காலமாக வரி செலுத்தாமல் உள்ள திருநெல்வேலி மண்டலம் (பழைய வார்டு 41ல்) சேரன்மகாதேவி ரோடு குடியிருப்பு ஒன்றிலும் (பழைய வார்டு 51ல்) புகழேந்தி தெரு குடியிருப்பு இரண்டிலும் , மேலப்பாளையம் மண்டலம் (பழைய வார்டு 33ல்) கணேசபுரம் தெரு குடியிருப்பு ஒன்றிலும் ஆக மொத்தம் 4 வீட்டுக் குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது வீட்டுக் குடிநீர் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கைகளை தவிர்த்திடும் பொருட்டு நிலுவை வரியினங்களை காலதாமதம் இன்றி மாநகராட்சி கணிணி வரி வசூல் மையத்தில் செலுத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்.