நெல்லையில் ரயில் தண்டவாளத்தில் வடமாநில தொழிலாளர் சடலமாக மீட்பு
நெல்லையில், தண்டவாளத்தில் வட மாநில இளைஞர் சடலம் மீட்கப்பட்ட நிலையில், கொலையா அல்லது தற்கொலையா என விசாரணை நடக்கிறது.
HIGHLIGHTS
நெல்லை டவுன், குறுக்குத்துறை ரயில்வே கேட் அருகில், தண்டவாளத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் சிதறிய நிலையில் கிடந்தது. நெல்லை சந்திப்பு காவல்துறையினர் மற்றும் நெல்லை ரயில்வே போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்ட போலீசார், உடற்கூறு ஆய்வுக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஏற்கனவே, நெல்லையில் தொடர் கொலை சம்பவங்கள் நடைபெற்றதால், அதன் தொடர்ச்சியாக இதுவும் கொலையாக இருக்குமோ என்பதை அறிய, மாநகர காவல்துணை ஆணையர் சுரேஷ்குமாரும், சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டன. நெல்லை ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில், உயிரிழந்த நபர் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ஜோன் சான் நாக் (50) என்பதும், நெல்லை ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணியில், வேலை செய்வதற்கு நெல்லை வந்ததும் தெரிய வந்துள்ளது.இன்று அதிகாலை 4.00 மணிக்கு, பாலக்காட்டில் இருந்து நெல்லை நோக்கி வந்த பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலில் மோதி இறந்துள்ளார். கொலையா, அல்லது தற்கொலையா என விசாரணை நடந்து வருகிறது.