நெல்லை மாவட்டத்தில் கனமழை: தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலை ஆற்று வெள்ள நீர் சூழ்ந்து செல்கிறது.
HIGHLIGHTS
நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலை ஆற்று வெள்ள நீர் சூழ்ந்து செல்கிறது.
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி நெல்லை மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்திருந்தது. நெல்லை மாவட்டத்தில் நேற்று மதியம் தொடங்கிய கனமழை இன்று அதிகாலை வரை தொடர்ந்து பெய்தது.
நெல்லை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் கனமழை பெய்த நிலையில் மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் மற்றும் சேர்வலாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கனமழை காரணமாக பிரதான அணைகள் முழு கொள்ளளவை நெருங்கி வரும் நிலையில் அணைகளில் இருந்து தாமிரபரணி ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. கன மழையினால் ஏற்பட்டுள்ள காற்றாற்று வெள்ளம் மற்றும் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் உள்ளிட்டவைகள் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளிலிருந்து 1,300 கன அடி நீர் தாமிரபரணி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இது தவிர கடனாநதி மற்றும் ராமநதி அணையிலிருந்து வெளியேற்றப்படும் 850 கனஅடி நீர் மற்றும் காட்டாற்று வெள்ளம் ஆகியவை சேர்ந்து சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கனஅடி நீர் தாமிரபரணி ஆற்றில் வந்துகொண்டிருக்கிறது. நெல்லை மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக சேரன்மாதேவியில் 125 மில்லி மீட்டரும், பாளையங்கோட்டையில் 78 மில்லி மீட்டரும் மழையளவு பதிவாகியுள்ளது. மொத்தமாக நெல்லை மாவட்டத்தில் 50.5 சென்டிமீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது.
தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக தாழ்வான பகுதிகளை தொடர்ந்து, மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் துறையினர் கண்காணித்து வருகின்றனர். தாமிரபரணி ஆற்றில் மறு உத்தரவு வரும் வரை குளிக்கவும், வேடிக்கை பார்க்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா தலங்களுக்கும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.