நெல்லையில் ஸ்மார்ட் சிட்டி கட்டண கொள்ளையை கண்டித்து போராட்டம்: 22 பேர் கைது
நெல்லையில் ஸ்மார்ட் சிட்டி கட்டண கொள்ளையை கண்டித்து ஆட்சியர் அலுவலகம் முன்பு குடியேறும் போராட்டம் நடத்திய 22 பேர் கைது.
HIGHLIGHTS
ஸ்மார்ட் சிட்டி கட்டணக் கொள்ளையைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குடியேறும் போராட்டம் நடத்திய வியாபாரிகள், சிறுவர்கள், பெண்கள் உள்பட 22 பேரை இரவோடு இரவாக போலீசார் கைது செய்ததால் பரபரப்பு.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு அங்கு சீர்மிகு நகர் திட்டத்தின் ( ஸ்மார்ட் சிட்டி) கீழ் புதிதாக வணிக வளாகத்துடன் கூடிய பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கு அமைக்கப்பட்டுள்ள கடைகளின் வாடகை மற்றும் டெபாசிட் கட்டணம் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதை கண்டித்து வியாபாரிகள் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். டெபாசிட் தொகையாக ஒரு கோடி ரூபாய் வரை கட்டணம் நிர்ணயித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் இது மிகப்பெரிய கட்டண கொள்ளை என்றும் பாளையங்கோட்டை போன்ற சிறிய நகரத்தில் இவ்வளவு பெரிய தொகை கொடுத்து கடை நடத்த முடியாது என்பதால் கட்டணத்தை குறைக்க வேண்டும் என வியாபாரிகள் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக வியாபாரிகள் தங்கள் குடும்பத்துடன் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்த முயன்றனர். போலீசார் அவர்களை உள்ளே அனுமதிக்காததால் ஆட்சியர் அலுவலகத்துக்கு வெளியே பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் என குடும்பத்துடன் அமர்ந்து காலை முதல் போராட்டம் நடத்தி வந்தனர்.
தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை இங்கிருந்து கலைய மாட்டோம் என கூறி அங்கேயே தங்கினர். போலீசார் பேச்சுவார்த்தையை ஏற்கவில்லை. இதையடுத்து இரவோடு இரவாக போராட்டம் நடத்தி வந்த இரண்டு சிறுவர்கள், பெண்கள் உள்பட 22 பேரை பாளையங்கோட்டை போலீசார் திடீரென கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். பின்னர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இச்சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.